ராமநாதபுரத்தில் பாஜக கூட்டத்தில் தாக்கப்பட்ட இஸ்லாமியர்...அமைதிகாத்த தமிழிசை: வீடியோ
ராமநாதபுரத்தில் நடந்த பாஜக கண்டன ஆர்ப்பாடட்த்தில், முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டபோது தமிழிசை அதை தடுக்க எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதி பாஜக செயலாளர் அஸ்வின்குமார் தந்தை தாக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, மாநிலத் தலைவர் தமிழிசை முன்பு இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம்பகுதி செயலாளர் அஸ்வின் குமார் என்பவரது தந்தை, அவருடைய செல்போன் கடையில் இருந்தபோது மர்மநபர்களால் தாக்கப்பட்டார். அதில் அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் வழக்கில் மணிகண்டன், தஸ்வே ரவி, முத்துராமலிங்கம், தஸ்வே தவசிநாதன் மற்றும் சதீஸ் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இருந்த போதும் பாஜகவினர் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் அஸ்வின் குமார் தந்தை தாக்கப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம், அரண்மனை பகுதியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை முன்னிலையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தை இஸ்லாமியர் ஒருவர் செல்போனில் படமெடுத்தார். அதைக் கண்ட பாஜகவினர் அவரை தாக்கினர்.ஆனால் தமிழிசை அங்கிருந்த போதும் தாக்குதலைத் தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் பாஜகவினர் திட்டமிட்ட மதச் சண்டைகளை உருவாக்க முயன்று வருகின்றனர் என அரசியல் நோக்கர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.