ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை – 6 பேர் கொண்ட கும்பலுக்கு “வலை”
சென்னை: சென்னை அருகே சோமங்கலம் பகுதியில், ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு, ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் என்கிற கஜா. நடுவீரப்பட்டு தி.மு.க அவைத்தலைவரான இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடங்களை ஒப்பந்த முறையில் கட்டித்தரும் தொழிலும் செய்து வந்தார்.
இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஹரிகரன் என்ற மகனும், சங்கீதா, சத்யா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
தினமும் அருகில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று அங்கு கட்டிட வேலைக்கு வருபவர்களை கட்டிட பணி நடக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைத்துவிட்டு வருவது வழக்கம்.
நேற்று காலை வழக்கம்போல மோட்டார் சைக்கிளில் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கஜேந்திரனை வழி மறித்து சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் கஜேந்திரனுக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கஜேந்திரனை அப்பகுதி மக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜெயகுமார், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கஜேந்திரன் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications