ஜெ. குட்புக்கில் இருந்த அசோக்குமார் ராத்திரியோடு ராத்திரியாக "விஆர்எஸ்" பெற்றது ஏன்?
சென்னை: மத்திய அரசுப் பணியில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவால் அழைத்துவரப்பட்டு டிஜிபியாக்கப்பட்ட அசோக்குமார் திடீரென நள்ளிரவில் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றது ஏன் என்பது குறித்து அடுக்கடுக்கான விவரங்களை முன்வைக்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
ஹரியானா மாநிலம் சோனேபட்டில் 1955-ம் ஆண்டு பிறந்தவர் அசோக்குமார். 1982-ம் நேரடி ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக பேட்ஜில் தேர்வு செய்யப்பட்டார். தொடக்கத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏ.எஸ்.பி.,யாக பணியாற்றினார். பின்னர் திருச்சி எஸ்.பி.யாகவும் தென்சென்னை துணை கமிஷனராகவும் பணியாற்றினார்.
இதன் பிறகு சிபிஐயில் 7 ஆண்டுகாலம் பணியாற்றினார். அப்போது 2012-ம் ஆண்டு இறுதிவாக்கில் டெல்லிக்கு முதல்வர் ஜெயலலிதா பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அரசுப் பணியில் உள்ள தமிழக பேட்ஜ் அதிகாரிகள் ஜெயலலிதாவை சந்தித்தனர். அந்த அதிகாரிகளில் ஒருவர் அசோக்குமார்.
ஜெ. அழைப்பு
அப்போது, தமிழக பேட்ஜ் அதிகாரிகள் பலரும் டெல்லியில் பணியாற்றுகிறீர்களே.. தமிழக அரசுடன் வந்து இணைந்து பணியாற்றலாமே? என ஜெயலலிதா கேட்டிருக்கிறார். மேலும் உங்கள் பணி பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் எனவும் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். இதனடிப்படையில் தமிழக பணிக்கு மீண்டும் திரும்பி வந்தவர் அசோக்குமார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருந்த நிலையில் மீண்டும் சிபிஐ-ல் ஏடிஜிபியாக பணியாற்றினார். 2011-ல் தமிழக பணிக்குத் மீண்டும் திரும்பிய அசோக்குமார் உளவுத்துறை ஏடிஜிபியாக்கப்பட்டு பின் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து டிஜிபியாக இருந்த ராமானுஜம் ஓய்வு பெற்ற நிலையில் 2014-ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அசோக்குமார் நியமிக்கப்பட்டார். அசோக்குமாரின் பதவி காலம் முடிவடைந்த பின்னரும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கினார் ஜெயலலிதா.
கருணாநிதியுடன் சந்திப்பு
சட்டசபை தேர்தல் நடந்த போது திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என ஞானதேசிகனைப் போல கனவு கண்ட அதிகாரிகளில் அசோக்குமாரும் ஒருவர். அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசியதாகவும் கார்டனுக்கு தகவல் போனது.
அதனால் தலைமைச் செயலர் பதவியில் இருந்த ஞானதேசிகனை டம்மியாக்கியது போலவே அசோக்குமாரையும் டம்மியாக்க முடிவு செய்தார் ஜெயலலிதா. அப்போது தொடங்கியதுதான் இருவருக்கும் இடையேயான முட்டல்.. இந்த முட்டல் மோதலை படுலாவகமாக பயன்படுத்திக் கொண்டது கார்டனுக்கு நெருக்கமான அதிகாரிகள் டீம்.
அரசுக்கு எதிராக...
இந்த நிலையில் ஞானதேசிகன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட ஐஏஎஸ் அதிகாரிகள் கொந்தளித்தனர். அப்போது ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஐஏஸ் அதிகாரிகள் குறித்த கட்டுரை ஒன்று வெளியானதாம். அதில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டதாம். அந்த கட்டுரை வெளியாவதற்கு முதல்நாள் கட்டுரை எழுதியவருடன் அசோக்குமார் நீண்டநேரம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதனால் அசோக்குமார்தான் இந்த கட்டுரைக்கே காரணம் என போட்டுக்கொடுத்தது தலைமைச் செயலக அதிகாரிகள் டீம்.
க்ளைமாக்ஸ்
அத்துடன் காவிரி விவகாரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படும் நாளில் சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாம். அதிலும் அசோக்குமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டதாம்.காவல்துறையில் 20,000 பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கிறீர்கள்... இன்னமும் பைல்களில் கையெழுத்து போடாமல் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கை எப்படி பராமரிக்க முடியும் என உள்துறை செயலரிடம் அசோக்குமார் எகிறிய விவகாரமும் ஜெயலலிதாவிடம் கூறப்பட்டது.. இதனால் ஜெயலலிதா மிக கடும் அதிருப்தி அடைந்தாராம். இதை உணர்ந்து கொண்ட அசோக்குமார் விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு இரவோடு இரவாக அலுவலகத்தை காலி செய்துவிட்டார். இனி அவர் சொந்த மாநிலமான ஹரியானாவில் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது.