தனியார் டிவியின் காழ்ப்புணர்ச்சிக் கேள்வி.. ஆனால் உறவு சிதையாது... திருமாவளவன்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் இடையிலான உறவை யாராலும், எவராலும் சிதைக்க முடியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நேர்காணல் மார்ச் 28 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அவரை நேர்காணல் செய்த அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு ஓரிரு கேள்விகளை எழுப்பியதைக் காண முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்னும் கருத்தைப் பரப்புவதாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் கொள்கைப் புரிதலோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே இக்கேள்வி எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் எத்தகைய புரிதலோடும் நட்புறவோடும் இணைந்து பணியாற்றினார்களோ அதே வகையில், அவ்விரு தலைவர்களின் வழியில் இன்றும் இவ்விரு இயக்கங்களும் தோழமை உணர்வோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, சாதி-மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் பெரியாரிய சக்திகளோடு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து களமாடி வருகிறது.
திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக்கப்படுவதுண்டு. தற்போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியானோம் என ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகுந்த பூரிப்போடு அறிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெற்றிருக்கிறது. அவ்வுறவில் சிறு கீறலையாவது ஏற்படுத்த வேண்டுமென்னும் தீய உள்நோக்கத்தோடு அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குதர்க்கமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அக்கேள்விக்குப் பதிலளித்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியவரின் திசை திருப்பும் முயற்சியை மிகச் சரியாக அம்பலப்படுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் தந்தை பெரியார் அவர்களையும் தமது கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சாதிமதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடிவரும் சான்றோர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தந்தை பெரியாரின் பெயரில் விருது மற்றும் பொற்கிழி வழங்கி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்து வெளியீடுகளும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களின் திருவுருவப் படங்களோடுதான் வெளியிடப்பட்டு வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகளின் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் இருவரும் 'புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் சமூகப் பணி ஆற்றுவோம்!' என உறுதியேற்று வருகின்றனர்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவும் இடங்களிலெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைகளையும் நிறுவ வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு கட்சியின் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எனது அரசியல் உந்துசக்திகளாக விளங்கும் மூவரில் ஒருவர் தந்தை பெரியார் என்பதை மிகுந்த பூரிப்போடு அறிவிப்புச் செய்திருக்கிறேன். அதாவது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் ஆகிய மூவரும்தான் எனது பொதுவாழ்க்கைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்துவரும் தலைவர்கள் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறேன். பெரியார் திடலிலிருந்துதான் என் அரசியல் பயணம் தொடங்கியது என்பதைப் பல முறை பதிவு செய்திருக்கிறேன்.
இவ்வாறு பெரியாரின் கொள்கைகளோடும் பெரியாரின் இயக்கங்களோடும் இரண்டறக் கலந்து ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் மற்றும் பிற விளம்புநிலை மக்கள் யாவரையும் அமைப்பாக்குவதிலும் அரசியல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் விடுதலைச் சிறுத்தைகளின் மீதான நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில், அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கேள்விகள் எழுப்பியதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையிலான நட்புறவை எவராலும் எக்காலத்திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறது. மேலும், சாதி-மதவெறி சக்திகளுக்கெதிராக பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களோடு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து போராடும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.