குவியும் நிவாரணப் பொருட்கள்.. அசராமல் அனுப்பி அசத்தும் இளைஞர் பட்டாளம்!
சென்னை: சென்னைக்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. அத்தனை நிவாரணப் பொருட்களும் நேரு உள்ளரங்க ஸ்டேடியத்திற்கு வந்து குவிகின்றன. அவற்றை தரம் பிரித்து தனித் தனியாக பாக்கெட் போட்டு அனுப்பும் பணியில் இளைஞர் பட்டாளம் அசராமல் ஈடுபட்டு வருகிறது.
அத்தனை பேரையும் வியக்க வைக்கும் வகையில் இந்த இளைஞர்களும், இளம் பெண்களும் மின்னல் வேகத்தில் ஈடுபடுவதை பலரும் மனசார பாராட்டி வருகின்றனர்.
ஒரு பெரிய தொழிற்சாலை போல காணப்படுகிறது நேரு ஸ்டேடியம். அங்கு வந்து குவியும் பொருட்களைப் பிரித்து பேக் செய்து அனுப்பும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இடைவிடாமல் செயல்பட்டு வருவது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய சென்னை
பெரு மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி சென்னை சின்னாபின்னமாகிப் போனது. நம்ம சென்னைக்கு இப்படி ஒரு கதியா என்று பலரும் கண்ணீர் விடும் அளவுக்கு நிலைமை போனது.

வந்து குவிந்த நிவாரண உதவிகள்
மழை வெளுத்த சமயத்தில் உள்ளூரில் இரு்ந்த மக்களே யாரையும் எதிர்பாராமல் மீட்புப் பணிகளில் குதித்தனர். இது ஒரு பெரும் இயக்கமாக மாறியது. அரசின் உதவியை எதிர்பாராமல் மக்களே ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர்.

அன்பு மழை
இதையடுத்து நிவாரண உதவிகள் சென்னையில் குவியத் தொடங்கின. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து சரமாரியாக வந்து குவிந்தன நிவாரணப் பொருட்கள்.

நேரு ஸ்டேடியத்தில்
இந்த நிவாரணப் பொருட்களை எங்கு அனுப்புவது என்பதில் ஆரம்பத்தில் அரசுத் தரப்பு பெரும் குழப்பம் விளைவித்தது. ஆனால் தற்போது நேரு ஸ்டேடியத்திற்கு இவற்றை அனுப்பி வருகின்றனர் தன்னார்வத் தொண்டர்கள். அங்கு வைத்து அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பில்
இந்தப் பணியை 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கிறார்கள். இங்கு பொருட்களைப் பிரித்து பாக்கெட் போட்டு டப்பாக்களில் அடைத்து அனுப்பும் பணியில் முழுக்க முழுக்க இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஈடுபடுகிறார்கள்.

இதுவரை 1290 மெட்ரிக் டன் பொருட்கள்
இதுவரை சென்னைக்கு 1290 மெட்ரி்க் டன் நிவாரணப் பொருட்கள் வந்துள்ளதாகவும் அதில் 1275 மெட்ரிக் டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியரின் வியப்பு
இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேட் மான்ட்கோமரி என்பவர் கூறுகையில் இங்கு மக்களே இயக்கமாக செயல்படுவது ஆச்சரியம் தருகிறது, பிரமிக்க வைக்கிறது. மிகப் பெரிய மக்கள் இயக்கமாக இது காணப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications