டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி, கெய்ல் ஆய்வு... இடைக்காலத் தடையை நீக்கியது பசுமைத் தீர்ப்பாயம்
சென்னை : காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்கள் ஆய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தொடர்ந்த வழக்கில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் , கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்கு ஆய்வு உள்ளிட்ட பூர்வாங்க பணிகளைத் தொடர ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் மீத்தேன் எடுக்க எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என இரு நிறுவனங்களும் விளக்கமளித்ததை தொடர்ந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள விதித்திருந்த தற்காலிக தடையை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் நீக்கி உத்தரவிட்டது. மேலும், வரும் 18ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் ஏற்கனவே போராட்டங்கள் நடத்திய விவசாய அமைப்பினர், பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். மீண்டும் போராட்டங்களை நடத்த அவர்கள் தயாராகி வருகின்றனர்.