ஒரு வாரத்தில் மதுரை கிரானைட் முறைகேடு குறித்து ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல்: சகாயம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து இன்னும் ஒரு வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சட்ட ஆணையர் சகாயம் ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக சகாயத்திற்கு ஏகப்பட்ட மிரட்டல் போன்கள், கடிதங்கள் வந்துள்ளன. இதனால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சகாயம் விசாரணை நடத்தி முடித்திருந்தார். அதன் பின்னர் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மனு கொடுத்து இருந்தனர். இதன் அடிப்படையிலேயே அவர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், பிஆர்பி கிரானைட் குவாரியில் டிரைவராக வேலை பார்த்த கீழவளவை சேர்ந்த சேவற்கொடியான் என்பவர் பிஆர்பி நிறுவனத்தினர் மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாக சகாயத்திடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், இன்று நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் சகாயம் தலைமையில் தோண்டும் பணி நடந்து வருகிறது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சகாயம், "மதுரை கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நரபலி விவகாரம் குறித்து காவல்துறை, வருவாய்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
நரபலி கொடுக்கப் பட்டதாகக் கூறப்படும் இடத்தில் இதுவரை 5 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications