ஜெயலலிதாவின் தோழி சசிகலா சின்னம்மா ஆனார்... மாஜி தோழியோ "அம்மா"வானார்
ஜெயலலிதாவின் மாஜி தோழியான சந்திரலேகாவின் பிறந்தநாளையொட்டி அவரை அம்மா என்று அழைத்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மாஜி தோழியும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சந்திரலேகாவின் பிறந்த நாளையொட்டி, அவரை அம்மா என்று குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்த பேனரால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் வைத்துள்ள பட்டப்பெயர்களான தங்கத் தாரகை, புரட்சித் தலைவி, அன்னமிட்டகை உள்ளிட்ட பெயர்களை காட்டிலும் அம்மா என்றே அழைத்து வந்தனர். அவரது மறைவுக்கு பிறகு, அவரது நெருங்கிய தோழியான சசிகலாவை தொண்டர்களும், நிர்வாகிகளும் சின்னம்மா என்றே அழைத்து வந்தனர்.
வெறியாட்டம்
சசிகலாவும் ஜெயலலிதாபோல் அரசியலில் ஒரு வலம் வர வேண்டும் வெறியாட்டம் போட்டார். அதன் பலனாக வேண்டாம் வேண்டாம் என்று கூறி ஜெயலலிதாவின் பதவியான அதிமுக பொதுச் செயலாளர் பதவியை அபகரித்தார். அவரை போன்ற நடை, உடை, பாவனையை மாற்றிய சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய கார், நாற்காலிகளை பயன்படுத்தினார்.
சொத்துக் குவிப்பு
இறுதியாக முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு முட்டி மோதியபோது சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கும் அவர் ஆட்டத்தை நிறுத்தாமல் லஞ்சம், ஷாப்பிங் , சல்வார் கமீஸ் என்று சிறைத் துறையையே அதகளப்படுத்தி வருகிறார்.
உயிர் தோழி
இந்த நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏ ஆளாக்கு கருத்துகளை அள்ளித் தெளித்து வரும் தமிழக அரசியலில் புதுவரவாக மற்றொரு அம்மா முளைத்துள்ளார். ஆம்.... அவர் வேறு யாருமில்லை. ஷாத்ஷாத் ஜெயலலிதாவின் உயிர் தோழியாக இருந்த அவரது ஆட்சியிலேயே ஆசிட் வீச்சுக்குள்ளான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவுக்கு இன்று பிறந்த நாளாம்.
அம்மா என்றழைத்து...
அதையொட்டி சென்னை முழுவதும் அம்மா என்று குறிப்பிட்டு பிரம்மாண்டமான சுவரொட்டிகளை வைத்துள்ளனர். இதை சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா சின்னம்மா ஆனார். அவரது மாஜி தோழியோ தற்போது புதிய அம்மாவாக அவதரித்துள்ளார்.