போயஸ் கார்டனில் சரணடைந்த நாஞ்சில் சம்பத்! சசிகலா தலைமைக்கு ஆதரவு என திடீர் பல்டி!!
திமுக அழைக்காததால் விரக்தி அடைந்தார் நாஞ்சில் சம்பத்; இதையடுத்து தற்போது சசிகலா தலைமையை ஏற்றுக் கொண்டுவிட்டார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: அதிமுக பொதுச்செயலரான சசிகலாவின் தலைமையை ஏற்கும் தகுதி நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென வந்துவிட்டது; இதனால் சசிகலாவை போயஸ் கார்டனில் இன்று சந்தித்து பேசியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக ஏற்க முடியாது என அதிமுக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதிமுக அலுவலகம் முன்பு கீசெயின் விற்கும் சாதாரண தொண்டர் கூட சசிகலா படத்தை விற்பதற்கு பதில் தொழிலே வேண்டாம் என சபதமெடுக்கும் நிலைதான் உள்ளது.

பரபரப்பை கிளப்பிய சம்பத்
இதேபோல் சசிகலாவுக்கு அதிமுகவின் தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறதா? என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும்; அவரது தலைமையை ஏற்கும் தகுதி தமக்கு இல்லை; ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றெல்லாம் வாய்ஜாலம் பேசி பரபரப்பை கிளப்பினார் நாஞ்சில் சம்பத். மறைந்த ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரையும் அதிமுக அலுவலகத்திடம் ஒப்படைத்துவிட்டார் நாஞ்சில் சம்பத்.

திமுகவுக்காக காத்திருப்பு
அத்துடன் திமுக அழைத்தால் அக்கட்சியில் இணைவேன்; திமுகவின் முகமாக, முகவரியாக, சிறப்பான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படுகிறார் என்றெல்லாம் கூட நாஞ்சில் சம்பத் பாராட்டுப் பத்திரம் வாசித்துப் பார்த்தார். ஆனால் திமுகவோ நாஞ்சில் சம்பத்தை கண்டுகொள்வதாக இல்லை.

பொதுவாழ்வுக்கு ஓய்வு
இதனால் விரக்தி அடைந்த சம்பத், பொதுவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் நாஞ்சில் சம்பத். இலக்கிய கூட்டங்களில் தாம் பங்கேற்கப் போவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

திடீர் சந்திப்பு
இந்த நிலையில் திடீரென இன்று போயஸ் கார்டனுக்குப் போய் சசிகலாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து இனி தொடர்ந்து அதிமுகவுக்காக பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
அதாவது சசிகலாவின் தலைமையை ஏற்கும் தகுதி தமக்கு வந்துவிட்டதாக இப்போது மறைமுகமாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications