நெல்வரத்து அதிகரிப்பால் குறையும் அரிசிவிலை: நுகர்வோர்கள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் அறுவடை முடிந்து நெல்வரத்து அதிகரித்துள்ளதால் அரிசி விலை குறையத்தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்தது. பொன்னி அரிசி ஒரு கிலோ 56 ரூபாய் வரை விற்பனையானது. சாதாரண அரிசி ரூபாய் 40 ரூபாய்க்கு குறையாமல் விற்றது.
தென்மாவட்டங்களில் நெல் விளைந்தாலும் அரிசி,காய்கறி, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் அரிசி விலை ஜெட்வேகத்தில் சென்றதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான அரிசி ஆலைகள் முடிக்கிடந்தன. இதைப்போல் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழைபொய்த்துப் போனதால் நெல்வரத்து கணிசமாக குறைந்தது. கிணற்றுப் பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளும், நெல்லை தங்கள் தேவைக்காக தேக்கி வைத்திருந்தனர்.இதனால் அரிசி ஆலைகள்அதிபர்கள்,ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரும் நெல்லை மட்டுமே நம்பி இருந்தனர்.
நெல்லை,தூத்துக்குடியில் 34ரூபாய் விற்ற டீலக்ஸ் பொன்னி, விறுவிறுவென விலையேறி, 56 ரூபாய் வரை சென்றது. தற்போது பல மாவட்டங்களில் அறுவடை தொடங்கியுள்ளதாளும்,மின் தட்டுப் பாடு என்பது முற்றிலும் குறைந்துள்ளதாலும், மாநிலத்தில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளுக்கும் நெல் அரவைக்காக தட்டுப்பாடின்றி வந்து கொண்டிருக்கிறது.
சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் இங்கு நெல் வரத்து தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது பெய்ய ஆரம்பித்துள்ளதால்..ஐப்பசி மழையை நம்பி, ஆடியில் விதைத்த விவசாயிகள் பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேக்கி வைத்திருந்த நெல் விற்பனைக்கு வருவதால், ஆலைகளுக்கு நெல் வரத்து உள்ளது. இதைப்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போல் இல்லாமல் தற்போது மின் உற்பத்தியும் அதிகரித்து இருப்பதால் தடையில்லா மின்சாரமும் வந்துகொண்டிருப்பதால் அரிசி ஆலைகள் முழு நேரமும் இயங்க தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில்அரிசி கிலோவுக்கு, ஒன்று முதல், மூன்று ரூபாய் வரை குறைந்துள்ளது.கடந்த வாரம் 45 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, தற்போது, 42 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கு விற்ற கோ- 45 அரிசி 33 ரூபாய்க்கும், 35 க்கு விற்ற சி.ஆர்., (இட்லி அரிசி), 34 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதே போல் நெல்லின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் 1400ரூபாய்க்கு விற்பனை ஆன நெல்லின் விலை தற்போது 800ரூபாயாக குறைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம்,பாவூர்சத்திரம்,கீழப்பாவூர்,ஆவுடையானூர்,பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் முழு அளவில்செயல் படத்தொடங்கியுள்ளதால் தீபாவளிக்கு பிறகு அரிசி விலை மேலும் குறையும். தீபாவளியையொட்டி அரிசிவிலை குறையத்தொடங்கியுள்ளது பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.