ரியோ ஒலிம்பிக் போகும் தமிழக வீரர் கணபதி: ரூ. 3 லட்சம் கடன் வாங்கி மகனை அனுப்பும் தந்தை
வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் கணபதி, ஒலிம்பிக்கில் வேகநடை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். பொருளாதார நிலையில் இவரது குடும்பத்தினர் பின் தங்கியுள்ளனர் என்றாலும் பிரேசில் செல்லும் தனது மகன் செல்வதற்கு ராணுவவீரரின் தந்தை ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன், மாது தம்பதியினரின் மகன் கணபதி,27. இவர், தற்போது ராணுவத்தில் மதராஸ் ரெஜிமெண்டில் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார்.
இவர் அடுத்த மாதம் பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 20 மீட்டர் வேகநடை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவருக்கு மாவட்ட விளையாட்டு துறை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவவீரர் கணபதி, விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவரது சகோதரர் திருப்பதியும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இளைய சகோதரர் தந்தையுடன் கிராமத்தில் விவசாயத்தை கவனித்து வருகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தங்களது மகன் கணபதி தேர்வான தகவல் அறிந்த அவரின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், கணபதி போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் மகன் கணபதியை, பிரேசில் நாட்டிற்கு அனுப்புவதற்காக அவரது தந்தை கிருஷ்ணன் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாட்டிற்காக பெருமை சேர்க்க உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.