ஆர்.கே. நகரில் சூரியன் உதிக்கணும்... காலில் விழுந்து வாக்கு கேட்கும் திமுகவின் மருதுகணேஷ்
ஆர்.கே.நகரில் மண்ணின் மைந்தர் என்ற பெருமையோடு களமிறங்கியுள்ள திமுகவின் மருதுகணேஷ் வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கிறார்.
சென்னை: ஆர்.கே. இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் ஒவ்வொரு தெருவாக நடந்து சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அனைவருமே பழகியவர்கள் என்பதால் மூத்தவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கிறார்.
மருதுகணேசுக்கு சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமல்லாது கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக என கூட்டணி கட்சியினரும் ஆதரவாக உள்ளதால் படு உற்சாகமாகவே வலம் வருகிறார் மருதுகணேஷ்.
தேர்தல் வாக்குறுதி கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தினமும் 8 மணி நேரம் நடந்தே சென்று பிரச்சாரம் செய்கிறார். டீ கடைகளில் அமர்ந்து கொண்டும், சாலையோர கடைகளிலும் எளிமையாக வாக்கு சேகரிக்கிறார் மருதுகணேஷ்.
கலந்து கட்டி அடிக்கும் திமுக
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய 89 எம்எல்ஏக்கள், 65 மாவட்டச் செயலாளர்கள், 6 மாநகரச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஒரு ஓட்டு மிஸ் ஆகக்கூடாது
அனைவருக்கும் வாக்குச் சாவடி வாரியாக பகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திமுக ஒன்றிய, நகர, பேரூர், பகுதிச் செயலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர்.
குவிந்த தொண்டர்கள்
திமுக கட்சி கொடிகளால் வீதிகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மேலும், பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக நிர்வாகிகளும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் மருதுகணேஷூக்கு ஆதரவு திரட்டினர்.
மக்களிடம் பிரசாரம்
கடந்த சில ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாமல் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்யாதது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறோம் என்றார் கே.என். நேரு.
உதயசூரியன் உதிக்குமா?
திமுக ஆட்சியில் இருந்த போது செய்யப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இதனால், பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று நம்பிக்கையோடு கூறினார் கே.என்.நேரு. தங்களின் ஆதரவு இலைக்கா? சூரியனுக்கா என்பது ஆர்.கே. நகர் மக்களின் மனதில் மட்டுமே இருக்கும் ஒன்று. டிசம்பர் 24ஆம் தேதியன்று விடை கிடைத்து விடும்.
மக்கள் பாதிப்பு
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, மணலி சாலை, வ.உ.சி. நகர் மார்க்கெட் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த இடைத்தேர்தலால் ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள் மட்டுமல்லாது அருகில் உள்ள மற்ற தொகுதிகளின் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.