விடிய விடிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.. கட்சியினர் கமிஷன் அடிப்பதாகவும் 'பஞ்சாயத்து'
விடிய விடிய ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை : ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு விடிய விடிய பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்தல் மீண்டும் ரத்தாகுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சி வாக்காளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தல் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததால், தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வும், டி.டி.வி தினகரன் தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளிடம் தி.மு.க புகார் அளித்து உள்ளது. நேற்று ஆர்.கே நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க.,வினரை தி.மு.க தொண்டர்களே போலிஸாரிடம் பிடித்துக்கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு முதல் விடியவிடிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள், பறக்கும் படை, துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டையும் மீறி இந்த பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்கிற நிலையில், ஆர்.கே நகர் மக்கள் வேறு ஒரு கவலையில் ஆழ்ந்து உள்ளனர். ஓட்டுக்கு ரூபாய் ரூபாய் 6000 கொடுப்பதாக சொல்லிவிட்டு, பணம்கொடுப்பவர்கள் ரூபாய் 4000 மட்டுமே கொடுத்ததாகவும், மீதம் 2000 ரூபாயை அவர்களே கமிஷனாக எடுத்துக்கொண்டதாகவும் வாக்காளர்கள் புலம்பி வருகிறார்கள். தொடர்ந்து பணப்பட்டுவாடா புகார் எழுவதால் மீண்டும் ஆர்.கே நகர் தேர்தல் தள்ளி வைக்கப்படுமோ என்கிற கேள்வி மக்களிடையே எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications