ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா ஆலோசனை
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து, துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து கேட்டறிந்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தில் பரபரப்பாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் தேர்தல் ஆணையரின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உமேஷ் சின்ஹா வருகை
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைக் கண்காணிக்க 3 பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் கூடுதலாக நியமித்துள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்துள்ளார்.

துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆர்.கே.நகர் தேர்தல் செலவினப் பார்வையாளர், பொதுப்பார்வையாளர், காவல்துறை பார்வையாளர் மற்றும் 2 சிறப்புப் பார்வையாளர்களும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவும் பங்கேற்றார்.

பணப்பட்டுவாடா
தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா முயற்சிகளை தடுப்பது, வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் உமேஷ் சின்ஹா
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, மாலை 4 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நாளை ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று உமேஷ் சின்ஹா ஆய்வு நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications