ஜெ.தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவு... வீட்டில் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குவிந்ததால் பரபரப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வீடு முன்பு ஆர்கே நகர் தொகுதி மக்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஜெ.தீபா வீட்டின் முன்பு ஆர்கே நகர் தொகுதி மக்கள் திடீரென குவிந்தனர். அவர்கள் தீபா அத்தையின் தொகுதியான ஆர்கே.நகருக்கு வந்து எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார்.

இது அதிமுக தொண்டர்களுக்கு அரவே பிடிக்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாதான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகின்றனர். ஜெ.தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மன்னார்குடி கும்பலை விரட்டவேண்டும்
மன்னார்குடி கும்பலுக்கு அதிமுகவில் எந்த பதவியும் வழங்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தீபாவுக்கு அதிமுகவினரிடையேயான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எங்கள் தொகுதிக்கு வரவேண்டும்
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்கே நகர் தொகுதி மக்கள் திடீரென குவிந்தனர். அப்போது தீபா வீட்டில் இல்லாததால் அவரது கணவரை சந்தித்த மக்கள் தீபா ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர வேண்டும். அவர்தான் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
முன்னாள் எம்எல்ஏக்களும் ஆதரவு
இதனை ஏற்றுக்கொண்ட தீபாவின் கணவர் மாதவன், தீபா நிச்சயம் ஆர்கே நகர் தொகுதிக்கு வருவார் என உறுதியளித்தார். இதனிடையே அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு சென்ற முன்னாள் எம்எல்ஏக்கள்
சீர்காழி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம். எல்.ஏ.க்களான சந்திர மோகன், மூர்த்தி ஆகியோரும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் தீபாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதவு தெரிவித்தனர். அவர்களுடன் தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நெடுஞ்செழியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் திட்டை ரமேஷ், அன்புராஜ் உள்பட 25க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
ஜெய.தீபா பேரவை தொடக்கம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடையில் முதன் முதலாக ஜெய.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகத் திறப்பு
விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர்
"மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பொலிடிக்கல் சயின்ஸ் படித்தவர். அவர் நாட்டு மக்களுக்காக பாடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
தீபாவை பார்த்து பயம்
தீபாவுக்கு கட்சியின் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. தீபாவை பார்த்து பயந்து தான் உள்ளாட்சி தேர்தலை ஆட்சியாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்". இவ்வாறு மலரவன் பேசினார்.












Click it and Unblock the Notifications