தண்ணீராய் பாயும் பணம்.. ஒரே நாளில் ரூ.100 கோடி இறைக்க திட்டம்.. ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்தாகிறது?
ஆர்கே நகரில் பணம் தண்ணீராக பாய்ந்துள்ளதால் அங்கு இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஆர் கே நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்துள்ளதால் அங்கு 3 மணி நேரமாக நடைபெற்று வரும் அசாதாரண சூழல்களால் இடைதேர்தல் மீண்டும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்தவுடன் ஆர்கே நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் தமிழக மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வருவாய் துறையினரின் அறிக்கையைத் தொடர்ந்து இடைதேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.

வரும் 21-இல் தேர்தல்
இந்நிலையில் ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி மீண்டும் இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். எனினும் இன்று பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.

6 பேரை போலீஸார் கைது செய்தது
பணப்பட்டுவாடா தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸார் தவறாக கைது செய்துவிட்டதாகவும் அவர்களை விடுவிக்க கோரியும் ஆர் கே நகர் மக்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

தினகரன் அணியினர் மறியல்
இந்நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திமுகவினரும், தினகரன் அணியினரும் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் கொருக்குபேட்டையில் உள்ள பிசியோதெரபி மையத்தில் ரூ. 13 லட்சத்தை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பச்சையப்பன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் ரூ. 60 கோடி விநியோகம்
ஒரு வோட்டுக்கு ரூ.6 ஆயிரம் விநியோகிப்பதாகவும், இன்று மட்டும் ஒரு நாளில் ரூ 60 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆர்கே நகரில் ஒரே நாளில் ரூ. 100 கோடி பணம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்கே நகரே போர்க்களமாக காட்சியளிக்கிறது.

ஆலோசனை
ஆர்கே நகரில் பணம் பட்டுவாடா தொடர்பாக வந்த புகார்கள் குறித்து தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். எனவே ஆர்கே நகர் இடைதேர்தல் மீண்டும் ரத்தாகும் நிலை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications