காயலாங்கடைக்கு செல்லப்போவது கையாலாகாத அரசுதான் : டிடிவி தினகரன் பொளேர்
காயலாங்கடைக்கு செல்லப்போவது கையாலாகாத அரசு தான் என்று டி.டி.வி தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : காயலாங்கடைக்கு செல்லப்போவது கையாலாகாத அரசு தான்; இது தேர்தலுக்கு பிறகு நிச்சயம் நடக்கும் என்று ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் டி.டி.வி தினகரன் தெரிவித்து உள்ளார்.
வருகிற 21ம் தேதி ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி தினகரன் களம் இறங்க உள்ளார். இவருக்கு தேர்தல் ஆணையம் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கி உள்ளது.
ஆர்.கே நகரில் காவல்துறை ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தனது அணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மிரட்டுவதாகவும், தேவை இல்லாமல் கைது செய்வதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் டி.டி.வி தினகரன் மனு அளித்தார்.
இதனைத்தொடர்ந்து மாலையில் இருந்து மணலி, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அதில் மணலியில் வாக்காளர்களிடம் பேசிய தினகரன், இந்த தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி அனைத்து வித அடக்குமுறைகளையும் கையாண்டு வருகிறது.
மாநில அரசின் மோசமான நடவடிக்கைகளால் குக்கர் சின்னம் தாய்மார்களிடம் அமோக ஆதரவு பெற்றுள்ளது. அதனால், நிச்சயம் தேர்தலுக்கு பிறகு கையாலாகாத அரசு காயலாங்கடைக்கு செல்லப்போவது உறுதி என்று தினகரன் தெரிவித்து உள்ளார்.
டிடிவி தினகரனின் "குக்கர்" கடைசியில் காயலாங்கடைக்குத்தான் செல்லும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.