நாம சிரிச்சா 'குத்தமாகுமோ'... பியூஸ் போன ஓபிஎஸ்ஸை நினைத்து அடக்கி வாசித்த எடப்பாடி!
சென்னை ஆர்.கே நகரில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அப்போது அவர் எதற்காகவோ கஷ்டப்பட்டு சிரித்தபடி மக்களுக்கு உதவிகள் வழங்கினார்.
சென்னை: சென்னை ஆர்.கே நகரில் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அப்போது, அவரிடம் உதவிகளைப் பெற்று செல்லும் பயனாளிகளை பார்த்து கை கூப்பியது என்னவோ சடங்குக்கு செய்ததாகவே தெரிந்தது.
இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் தொகுதியில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினார். அண்மையில் எண்ணூர் கடல்பகுதில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில் எண்ணெய் கடலில் கொட்டியதால், மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் மீன், நண்டு, ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து போயின. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமுடியவில்லை.
அப்படி, மீனவப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கினார். அப்போது, நிவாரண உதவித் தொகை வாங்க வந்த பயனாளிகளைப் பார்த்து சிறிது கூட புன்னகைக்கவில்லை. அவருடைய செய்கை மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது.
பொதுவாக, ஜெயலலிதா இம்மாதிரியான நிவாரணங்களையும் நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது பயனாளிகளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அது இயலாத போது, ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைப்பார். அவருக்கு அருகில் நிற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பதற்றத்தை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் இருப்பார்கள். அது உதவி பெறும் மக்களுக்கு சந்தோஷம் கிடைக்கும்.
இன்று எடப்பாடி பழனிச்சாமி புன்னகைக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவருக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த தனிச் செயலர் விஜயகுமார் ஐஏஎஸ், அமைச்சரைப் போலவே இறுக்கமாக, வாயில் எதையோ போட்டு மென்றுகொண்டிருந்தார். அதைவிட, அவரே 'சரி... நன்றியுரை சொல்லிடுங்க' என்று மேடையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் போல் குரல் கொடுத்தார்.
ஒருவேளை 'மக்களைப் பார்த்து புன்னகைக்கக் கூடாது' என 'மேலிட' உத்தரவுக்கு அவர் கட்டுப்பட்டு செயல்பட்டிருக்கலாமோ?