காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது... தேர்தல் ரத்தானதால் ஆர்.கே.நகர் மக்கள் படு குஷி
ஆர்.கே நகர் தொகுதி இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அத்தொகுதி மக்கள் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பணம் பெற்ற அத்தொகுதி மக்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இதில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை நியமித்தது. எனினும் பண வினியோகத்தை முழுமையாக தடுக்க முடியாமல் திணறியது.
இதனால் நாட்டிலேயே இல்லாத அளவுக்கு மைக்ரோ அப்சர்வர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது.

பரிசு கூப்பன்கள்
இந்நிலையில் 18 கோடிக்கு மேற்பட்ட ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனால் தேர்தல் களத்தில் இருந்த கட்சியினர் பணம் கொடுத்தால் பறிமுதல் செய்கின்றனர் என்பதால் பரிசு பொருள்கள், கிப்ட் கூப்பன்கள் என வாங்கி குவித்து வைத்துள்ளனர்.

விடிய விடிய பணம்
ஆர்.கே.நகர் மக்களுக்கு தினகரன் தரப்பினர் விடிய விடிய நூதன முறையில் பணம் அளித்து வந்தனர். ஒரு ஓட்டுக்கு ரூ.2000 முதல் 7000 வரை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தினகரன் தரப்பு ரூ.128 கோடி செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றன.

ஐடி ரெய்டு
இந்த நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோரது வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் ரூ.89 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தேர்தல் ரத்து
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பிய சோதனை அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
எனினும் பணம், பரிசு, வீட்டு உபயோக பொருள்கள் என அதிர்ஷ்டம் அவர்களுக்கு கொட்டியது.இதனால் தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீண்டும் பணம்
தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துவிட்டதால் பணப்பட்டுவாடா ஒழிந்து விடுமா. அடுத்த முறை தேர்தலிலும் இதேபோல் பணம் மீண்டும் வினியோகம் செய்யப்படும். இதை எண்ணிய மக்கள் மீண்டும் பணம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications