ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ உடன் போட்டியிட 21 பேர் மனுத்தாக்கல்
சென்னை: ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று மட்டும் 6 பேர் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனராம்.
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் 27ம்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர் சி.மகேந்திரனை களமிறக்குகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 3ம்தேதி தொடங்கியது. முதல்நாள் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
6ஆம் தேதியான இன்று தமிழ்மாநில கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.சி.பால்கனகராஜ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேசிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் சசிபெருமாளும், அகில இந்திய காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் இசக்கிமுத்துவும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
அவர்களை தொடர்ந்து, தமிழ்மாநில திமுகவை சேர்ந்த மணிமாறன், தேசிய மக்கள் கட்சி சார்பில் வெற்றிச்செல்வன் ஆகியோரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இவர்களைத் தவிர தனஞ்செழியன் என்பவரும் சுயேட்சையாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 21 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 10ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், வரும் 11ம் தேதி பரிசீலனை செய்யப்படவுள்ளன. மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 13ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு ஜூன் 27ம் தேதியாகும்.












Click it and Unblock the Notifications