எமனாக வந்த அரசு பேருந்து - தூத்துக்குடியில் தலை நசுங்கி பலியான சமையல்காரர்
தூத்துக்குடியில் சமையல்காரர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி சமையல்காரர் பலியானார். உயிரிழந்தவர் பெயர் சுடலைமணி மகன் துரை,32 என்பதாகும்.
தூத்துக்குடி, சக்திவிநாயகர்புரம் வசித்து வந்த இவர் சமையல் வேலை செய்து வந்தார். இன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.
சாப்பாட்டு ஆர்டருக்காக தூத்துக்குடி வ.உ.சி காய்கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காகத் தன் நண்பர் ஜெயராஜுடன் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது பைக் பஞ்சரானது.
பஞ்சர் பார்க்க பைக்கை மெக்கானிக் ஷாப்பில் விட்டுவிட்டு, சாலையின் எதிரில் உள்ள ஒரு கடையில் அமர்வதற்காக துரை சாலையைக் கடந்து சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து புளியம்பட்டிக்கு சென்ற அரசு பேருந்து துரை மீது மோதியது.
இதில் தலை நசுங்கிய துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார் துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அரசு பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.