கோவை: நகைக்கடை ஊழியர்களை தாக்கி ரூ.1.20 கோடி கொள்ளை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நகைக்கடை ஊழியர்களை தாக்கி ரூ.1.20 கோடி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவைச் சேர்ந்தவர் பஜன்லால். இவருக்கு கோவை பெரியகடை வீதியில் தங்கபிஸ்கட் விற்பனை செய்யும் நகைக்கடை உள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று தேதி நள்ளிரவு பஜன்லால் தன்னுடைய ஊழியர்கள் 4 பேரிடம் ரூ.1 கோடியே 20 லட்சத்தை கொடுத்துள்ளார். அதை கோவைக்கு கொண்டு சென்று நிறுவனத்தில் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
பஜன்லால் கூறியபடி ஊழியர்கள் 4 பேரும் ஒரு காரில் கோவைக்கு புறப்பட்டனர். அவர்களது கார் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி அருகே குறுகிய பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது மினிடோர் ஆட்டோ ஒன்று குறுக்கே வரவே ஊழியர்கள் வந்த காரின் வேகத்தை குறைத்துள்ளனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த கார் ஒன்று ஊழியர்களின் காரை உரசியபடி வந்து நின்றது.
அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேர் இறங்கி நகைக்கடை ஊழியர்கள் வந்த காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். பயந்து போன ஊழியர்கள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்.
அப்போது அந்த கும்பல் ஊழியர்களில் 3 பேரை குண்டுக்கட்டாக தங்கள் காருக்குள் தூக்கிப்போட்டது. மற்றொருவரை அவர் வந்த காருக்குள் தள்ளினர். அடுத்த கட்டமாக அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஊழியர்கள் வந்த காருக்குள் ஏறிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இரு கார்களும் அங்கிருந்து கிளம்பின.
தமிழக-கேரள எல்லையில் உள்ள மீனாட்சிபுரம் என்ற இடத்தில் நடுக்காட்டில் 2 கார்களும் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் 4 பேரையும் காரில் இருந்து வெளியே இழுத்த அந்த கும்பல் அவர்களின் ஆடைகளை அவிழ்த்துக்கொண்டு தாக்கியது. பின்னர் ஊழியர்களிடம் இருந்த பணம் 1 கோடியே 20 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
நடுக்காட்டில் தவித்த ஊழியர்கள் 4 பேரும் அங்கிருந்து தட்டுத்தடுமாறி சாலைக்கு வந்து வழியாகச் சென்றவர்களிடம் செல்போன் வாங்கி தங்களது முதலாளி பஜன்லாலுக்கு தகவல் தெரிவித்தனர். பெருந்தல்மன்னாவுக்கு சென்று விட்டனர். அதன் பின்னர் இன்று காலை பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு பஜன்லால் மற்றும் ஊழியர்கள் 4 பேர் வந்து புகார் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு ஆடைகளை வாங்கிக்கொண்டு வந்த பஜன்லால் உடனடியாக அவர்களை பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து புகார் செய்யாதது ஏன்? அவர்கள் கொண்டு வந்த பணம் கணக்கில் வரக்கூடியதா? அல்லது கறுப்பு பணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஊழியர்களிடம் பணத்தை பறித்துச் சென்ற கும்பல் அவர்களின் காரை கேரளாவில் இருந்தே பின்தொடர்ந்த விவரம் தெரியவந்துள்ளது. எனவே கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையை கனகச்சிதமாக செய்து முடித்தது தெரியவந்துள்ளது. பஜன்லால் பணம் கொடுக்கும் போது வாளையாறு சோதனைச்சாவடி வழியே செல்ல வேண்டாம். அங்கு கெடுபிடி அதிகமாக இருக்கும். பொள்ளாச்சி வழியே செல்லங்கள் என்று கூறியிருக்கிறார். எனவே அவர் கொடுத்து அனுப்பிய பணம் கணக்கில் வராததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications