தூத்துக்குடி வங்கியில் கொள்ளை முயற்சி.. லாக்கரை உடைக்க முடியாததால் பணம் தப்பியது
தூத்துக்குடி: தூத்துக்குடி பாண்டியன் கிராம வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கர் கதவை உடைக்கமுடியாத காரணத்தினால் பல லட்சம் தப்பியது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் பாண்டியன் கிராம வங்கி கிளை உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 தினங்களாக வங்கிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இன்று காலை பாண்டியன் கிராம வங்கியின் கிளை மேலாளர் கண்ணன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் வங்கியை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வங்கியின் ஜன்னல்கதவு உடைக்கப்பட்டு வங்கியின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். வங்கியின் கீழ்புறம் உள்ள இரும்புகடையின் வழியாக கொள்ளையர்கள் புகுந்து வங்கியின் ஜன்னல் கதவை வளைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
வங்கியின் பீரோ மற்றும் மேஜையில் பணத்தை தேடிய கொள்ளையர்கள் பணம் ஏதுமில்லாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதன்பின்னர் கொள்ளையர்கள் வங்கியின் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் லாக்கரை திறக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
கொள்ளையர்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.லாக்கரை உடைக்க முடியாத காரணத்தினால் அதில் இருந்த பல லடசம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் துரித விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 31ம் தேதி பட்டப்பகலில் அரசு மருத்துவமனை செவிலியரை துப்பாக்கியால் சுட்டு நகையை பறித்து சென்ற கொள்ளையர்கள் இன்னும் பிடிபடாத சூழலில் வங்கியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் மாநகர மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications