தென் மாவட்டங்களை கலக்கி வந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது! துப்பாக்கிகள் பறிமுதல்
Recommended Video

சென்னை: பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமானவர் ராக்கெட் ராஜா. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த, ஆனைகுடி.

போலீஸ் தவிப்பு
கட்டப் பஞ்சாயத்து, கொலை மிரட்டல் உட்பட ராக்கெட் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் இல்லை, எனவே அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இதனிடையே, வெங்கடேச பண்ணையாரின் சித்தப்பா மகன் சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து ராக்கெட் ராஜா ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.

சிக்கவில்லை
அதேநேரம், தான் சார்ந்த சமூக மக்களுக்கு தோள் கொடுப்பதாக ராக்கெட் ராஜாவுக்கு தென் மாவட்டங்களில் நற்பெயர் இருந்ததால் போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. மும்பை உள்ளிட்ட நகரங்களில் ராக்கெட் ராஜா மறைந்திருந்ததாக கூறப்பட்டது. உளவுத்துறை மூலமும், அவர் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வந்தது.

சென்னையில் கைது
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், ராக்கெட் ராஜா மற்றும் கூட்டாளிகள் நால்வர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டர் குற்றச்சாட்டு
தன்னை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக ராக்கெட் ராஜா குற்றச்சாட்டு தெரிவித்து, சில மாதங்கள் முன்பு வீடியோ வெளியிட்டவர் ராக்கெட் ராஜா. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், தென் மாவட்டங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications