வெடிகுண்டு பீதி... 47 புதிய நவீன சுழல் கேமராக்கள் முலம் எழும்பூர் ரயில் நிலையம் கண்காணிப்பு
சென்னை: பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பழைய கேமராக்களை மாற்றி, 47 இடங்களில் புதிய அதி நவீன சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப் படும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார். மேலும், 14 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை தடுக்கும் வகையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னைத் தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனையிட்டனர். அவற்றில் தெளிவான காட்சிகள் பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழும்பூர் ரயில் நிலையத்தில் மேலும் சில இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது.
தீவிர சோதனை...
தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் எழும்பூர் ரயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்படுகிறார்கள். மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மூலம் ரயில் நிலையங்கள் சோதனையிடப்படுகிறது.
சுழலும் கேமராக்கள்...
எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 11 பிளாட்பாரங்களை கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே 44 கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. முன்பு ஒரு பகுதியை நோக்கி நிலை நிறுத்ததப்பட்டிருந்த அந்த கேமராக்களை மாற்றி விட்டு நவீன முறையில் சுழலும் வகை கேமராக்கள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு....
இதன்மூலம், நேற்று முதல் அனைத்து பிளாட் பாரங்களில் வந்து செல்லும் ரயில்கள், பயணிகள் நடமாட்டம் முன் பதிவு மையம், சாதாரண டிக்கெட் கவுண்டர் மையம், பயணிகள் காத்திருக்கும் இடம், காந்தி இர்வின் சாலையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பொது மக்கள் நடமாட்டம் போன்றவற்றை இந்தக் கேமராக்கள் கண்காணித்து காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.
கார் பார்க்கிங் கண்காணிப்பு...
அதேபோல், வி.ஐ.பி. கார் பார்க்கிங், பயணிகள் கார் பார்க்கிங் பகுதி, 4-வது பிளாட் பாரத்தில் உள்ள ஓட்டலை கண்காணிக்கும் வகையில் ரயில் நிலையத்திற்கு வெளியே 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
இதன்மூலம், கார் நிறுத்துமிடங்களில் ‘பை', பெட்டிகளை சதிக்காரர்கள் வைத்து விடாமல் தடுக்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தவிர இருசக்கர வாகனங்கள் நிற்கும் பகுதியிலும் கேமரா கண்காணித்து வருகிறது.
பாதுகாப்பு...
கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை எழும்பூர் டி.எஸ்.பி.பொன் ராம் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நான்கு புறமும் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 47 கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம், ரயில்கள் வந்து செல்வது துல்லியமாக கண்காணித்து வருகிறோம்.
யாரும் தப்ப முடியாது...
24 மணி நேரமும் இந்த கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் இயக்கி வருகிறார்கள். கேமராவில் இருந்து யாரும் தப்பி செல்ல இயலாது. அந்த வகையில் நீண்ட தூரம் வரை இவை காட்சிகளை படம் பிடித்து பதிவு செய்யும்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications