ரவுடி ராதாகிருஷ்ணனுக்கு 'குறி'... பிறந்த நாள் மப்பில் 'ஸ்கெட்ச்' போட்ட பினு!
முன்விரோதம் காரணமாக ரவுடி ராதாகிருஷ்ணனை கொல்ல பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
Recommended Video
சென்னை: முன்விரோதம் காரணமாக ரவுடி ராதாகிருஷ்ணனை கொல்ல பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை ரகசியமாக தெரிந்து கொண்ட போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
ஆட்டம்பாட்டம் என கொண்டாடிக்கொண்டிருந்த ரவுடிகளை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடிகளில் 8 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
ரவுடியை கொல்ல சதித்திட்டம்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி ரவுடிகளுக்கு இடையிலான முன்விரோதத்தில் ரவுடி ராதாகிருஷ்ணனை கொல்ல பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது சக ரவுடிகள் ஸ்கெட்ச் போட்டது அம்பலமாகியுள்ளது.
தேடப்படும் குற்றவாளி
கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட தொழிலில் போட்டியாக உள்ள ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது கேங்கை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களில் பலர் தேடப்படும் குற்றவாளிகள் ஆவர்.
3 பேர் தப்பியோட்டம்
பிணையில் வெளிவர முடியாத தலைமறைவாக இருந்த பல ரவுடிகளும் இதில் சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று ரவுடிகள் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறை நண்பர்கள்
சிறையில் இருந்தபோதே கைதியாக இருந்த சில ரவுடி நண்பர்களிடம் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து பினு திட்டம் போட்டதும் தெரியவந்துள்ளது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சென்னை மாநகரைச் சேர்ந்த அனைத்து ரவுடிகளும் இதில் பங்கேற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.
40க்கும் மேற்பட்ட போலீசார்
வேலு லாரி ஷெட் என்ற இடத்தில் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாக வந்த ஒரு தகவலை அடிப்படையாக கொண்டு 40க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி ஆபரேஷனை மேற்கொண்டுள்ளனர்.