பிரபல ரவுடி ஆனந்தன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. சென்னையில் பரபரப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (22). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
நேற்று, ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார் ஆனந்தன். இதில் ராஜவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் ஆனந்தனை பிடித்தனர். ஆனால் அவர்களை தாக்கிவிட்டு, வாக்கி டாக்கியையும் ஆனந்தன் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜவேலுவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீசார், ஆனந்தனை தேடி வந்தனர்.
இன்று இரவு, அடையாறு மத்திய கைலாஷ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே கூட்டாளிகளுடன் ஆனந்தன் பதுங்கியிருந்தபோது அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மீண்டும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட ஆனந்தன் முயன்றார். எனவே போலீசார் தற்காப்புக்காக ஆனந்தனை சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பலியானார்.
இதையடுத்து ஆனந்தனின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் போலீசார். இந்த என்கவுண்டர் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.