பழிக்குப் பழி.. நந்தனம் ரவுடி கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது!
சென்னை: இளம்பெண் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதற்றம் மறையும் முன்பாக சென்னையில் மீண்டும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்றிரவு நந்தனம் அண்ணா சாலை பகுதியில் ரவுடி வேலு வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரவுடி வேலுவை கொலை செய்த வழக்கில் ஒரு பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு மல்லிகைப்பூ நகரை சேர்ந்தவர் வேலு, 35. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற சம்பவங்களில் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ரவுடி வேலு, நேற்று இரவு சைதாப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நந்தனம் சிக்னல் அருகே வேலு வந்தபோது, திடீரென்று அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து நிறுத்தியது.

வேலு சுதாரிக்கும் முன்பாக தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வேலுவை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த காட்சியை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வேலுவை வெறியுடன் தாக்கிய அந்த மர்ம கும்பல் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் அந்த இடத்திலேயே வேலு துடி, துடித்து இறந்துபோனார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முன்விரோதம் காரணமாக வேலுவை அவரது விரோதிகள் யாராவது தீர்த்து கட்டியுள்ளனரா? அல்லது கூலிப்படையின் வேலையா? என்று பல்வேறு கோணங்களில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகரின் முக்கிய பகுதியான சைதாப்பேட்டையில் இரவு நேரத்தில் மக்கள் செல்லும் சாலையில் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கொலை சம்பவம் நடந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் மூலம் விசாரணையை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும், ரவுடி வேலுவின் செல்போன் எண்ணிற்கு வந்த அனைத்து அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னை நகரில் நடந்து வரும் தொடர் கொலை சம்பவங்களால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். போலீசாரின் தொடர் நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்றிரவு 5 பேர் கொண்ட கும்பல் வேலுவை வெட்டி கொன்றது எப்படி என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தின் 2வது நடைமேடையில் இளம்பெண் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்கும் முன்பாகவே மீண்டும் ஒரு கொலைச்சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.
6 பேர் கைது
ரவுடி வேலு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பாக 2014ல் கொலை செய்யப்பட்ட கந்தன் என்ற ரவுடியின் மனைவி தேவி, சேகர், சசிக்குமார், வரதன், மதன்குமார், சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கந்தனை, வேலு கொலை செய்ததாகவும், இதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலையை 6 பேரும் செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications