சென்னை அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. அதிர்ச்சியில் மனைவி தற்கொலை!
சென்னை மறைமலை நகரில் நள்ளிரவில் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் மனைவி அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்.
மறைமலைநகர் : செங்கல்பட்டை அடுத்துள்ள மறைமலை நகரில் பிரபல ரவுடி தமிழழகன் நடு இரவில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து இவரது மனைவி நீலவேணி துக்கம் தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழழகன் கொல்லப்பட்டதும் , அவரது மனைவியின் மரணமும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரைச் சேர்ந்தவர் தமிழழகன். இரண்டு கொலை வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு என இவர் மீது 17 வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மிகவும் பிரபல ரவுடியான இவர் நீலவேணி என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தமிழழகன் மீது பலர் நீண்ட நாட்களாக தீராத கொலைப் பலியில் இருந்துள்ளனர்
தாக்கப்பட்ட தமிழழகன்
இதையடுத்து நேற்று வெளியில் 11 மணிக்கு மறைமலை நகர் ரயில் நிலையம் வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 4 மர்ம நபர்கள் தமிழழகனை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போன தமிழழகன் அந்த இடத்திலேயே விழுந்தார்.
ரயில் நிலையம் அருகே கொலை
கீழே விழுந்த தமிழழகனை சராமாரியாக வெட்டத் தொடங்கியது அந்தக் கும்பல். தலை , உடல் என் அனைத்துப் பகுதியிலும் வெட்டப்பட்ட தமிழழகன் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். அவர் இறந்தபின் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியது அந்த மர்ம கும்பல். பின் அந்த இடத்டதிற்கு வந்த போலீசார் தமிழழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யார் கொலை செய்தது.?
அதன்பின் விசாரணையை தொடங்கிய போலீசார் , இந்தக் கொலை முன் பகை காரணமாக நடத்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணையை மாற்றியது. சம்பந்தப்பட்ட கொலை கும்பல் எதுவாக இருக்கும் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவரது மனைவி தற்கொலை
இதையடுத்து தமிழழகனின் மனைவி நீலவேணி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். அதிகாலை முன்று மணிக்கு அழைத்து வரப்பட்ட இவர் விசாரணை முடிந்து 6 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய கொஞ்ச நேரத்தில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நீலவேணி.
இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நீலவேணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த தொடர் மரணங்கள் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது .