ஓசூரை கலங்கடித்த ரவுடி சூரி.. படுகொலையின் பின்னணியில் யார்?!
ஓசூர்: ஓசூரை மேலும் ஒரு ரியல் எஸ்டேட் கொலை கலங்கடித்துள்ளது. இந்த முறை சூரி என்பவர் படுகொலையாகியுள்ளார். ஓசூரில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல கொலைகள் விழுந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்டவையாகும். இப்போது கொல்லப்பட்டுள்ள சூரி கூட ரியல் எஸ்டேட்டில்தான் இருந்து வந்தார்.
ஓசூர் நகர விஸ்வ இந்து பரிஷத்தின் செயலாளராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாலும் கூட சூரியின் உலகமே தனியாம். அவர் போலீஸாரால் ரவுடியாக அறிவிக்கப்பட்டவர். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த அவர் கேபிள் டிவி ஆபரேட்டராகவும் இருந்துள்ளார்.
நேற்று இரவு ஒரு கும்பல் நடு ரோட்டில் வைத்து சூரியை வெட்டித் தள்ளியது. படுகாயமடைந்த சூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார்.

ஓசூர் ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவராம். கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல், திருட்டு, அடிதடி, வெட்டுக் குத்து என அவர் உருமாறியதாக உள்ளூரில் சொல்கிறார்கள். இவர் மீது ஓசூரில் உள்ள காவல் நிலையங்களில் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளனவாம்.
கொலை, ஆள் கடத்தல், கொலை முயற்சி என இவர் மீது இல்லாத வழக்குகளே இல்லை என்றும் உள்ளூரில் சொல்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த அவர் அதை வைத்துக் கொண்டு தனது தொழிலில் கொடி கட்டிப் பறந்ததாக சொல்கிறார்கள்.
சூரி கொலையைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நகரில் பெரும் பய பீதியைக் கிளப்பியுள்ளனர். கடைகள் அனைத்தும் கட்டாயப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2007ம் ஆண்டு தேமுதிக துணைச் செயலாளர் அம்மன் பாலாஜி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் கைதானவர் சூரி. பின்னர் அவர் அதிலிருந்து விடுதலையானார். இந்த நிலையில் அம்மன் பாலாஜியின் ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு உள்ளது.
சூரி ஏற்கனவே ரவுடியாக இருந்தவர். அவரது பெயர் ரவுடிகள் லிஸ்ட்டில் இன்று வரை உள்ளது. பின்னர் அந்தஸ்தை மாற்றிக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு விசுவ இந்து பரிஷத் அமைப்பில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி தேடி வந்தது. அப்போது முதல் ஓசூரில் வினாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வந்தார். கொலை செய்யப்பட்ட சூரிக்கு ராதிகா என்ற மனைவியும், ரித்திகா, லைஷ்ணவி என்ற மகள்களும் லகுவேஷ் என்ற மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications