ராதாவை மிரட்டியது எனது கணவர் இல்லை.. ரவுடி வைரம் மனைவி பரபரப்பு பேட்டி
சென்னை: செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக ராதா சொன்ன ரவுடி வைரத்தின் மனைவி லீனா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பதிலடி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண், கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகியான நடிகை ராதா எனது கணவரை அபகரித்துக்கொண்டார். அவரிடம் இருந்து, எனது கணவரை மீட்டு தாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் விசாரணை நடத்தினார். அப்போது, உமாதேவி துணை கமிஷனர் சரவணனிடம் மீண்டும் இன்னொரு புகார் மனுவை கொடுத்தார்.
நடிகை ராதா செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மனுக்களுக்கு நடிகை ராதா எவ்வித பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.
நேற்று முன்தினம் சென்னை வந்த நடிகை ராதா, புதிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தன்னிடம் ரவுடி வைரம் என்பவர் செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக, பேட்டி கொடுத்த அவர், ரவுடி செல்போனில் மிரட்டி பேசிய பேச்சு பதிவான ஆடியோ பதிவையும் வெளியிட்டார்.
இதையடுத்து, நடிகை ராதா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று. தன் மீது புகார் கொடுத்த உமாதேவி மீதும், செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி வைரம் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பேட்டி கொடுத்துவிட்டு நடிகை ராதா சென்ற சற்று நேரத்தில், செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக ராதா சொன்ன ரவுடி வைரத்தின் மனைவி லீனா (38), போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.
அவர் நடிகை ராதாவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பதிலடி புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் லீனா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் குன்றத்தூரில், 2 குழந்தைகளுடன் வசிக்கிறேன். எனது கணவரை ரவுடியாக சித்திரித்து, குன்றத்தூர் போலீசார் பொய் வழக்கு போட்டு, சிறையில் தள்ளிவிட்டனர். எனது கணவர் கடந்த ஒன்றரை மாதமாக புழல் மத்திய சிறையில் இருக்கிறார். என்னுடன் கூட அவர் செல்போனில் பேச முடியாது.
இந்த நிலையில், நடிகை ராதா, எனது கணவர் செல்போனில் பேசி, அவரை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார். நடிகை ராதாவை செல்போனில் பேசி மிரட்டியதாக வெளியிட்ட தகவலை நானும் கேட்டேன். அது எனது கணவரின் குரல் அல்ல. எனது கணவரின் பெயரை பயன் படுத்தி யாரோ மர்ம நபர் செல்போனில் பேசி நடிகை ராதாவை மிரட்டி உள்ளார். அது யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். தயவு செய்து எனது கணவரை, நடிகை ராதா அவரது பிரச்சினையில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications