ரயிலில் பட்டாசு கொண்டு செல்வோரை கண்காணிக்க 5 தனிப்படைகள்... எஸ்.பி. தகவல்
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது ரயிலில் பட்டாசுகள் கொண்டுசெல்வோரை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் இங்கிருந்து இனிப்பு வகைகள், துணிமணிகளை வாங்கிச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதேநேரத்தில் ஆர்வக்கோளாரில் சிலர் பட்டாசுகளை இங்கேயே வாங்கிக் கொண்டு ரயிலில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.

இதனைத் தடுக்கும் வகையில் ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பி.விஜயகுமார் கூறுகையில்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பட்டாசுகள் கொண்டு செல்வதை கண்காணிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் இருப்பார்கள். இவர்கள் சாதாரண உடையிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
ரயில்களில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள், பட்டாசுகள், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ரெயில் பயணிகளுக்கு எந்த உதவியாக இருந்தாலும் ‘1512' என்ற 24 மணி நேர உதவி எண் மற்றும் 9962500500 (வாட்ஸ்-அப்) எண்ணும் சேவையில் உள்ளது. இந்த எண்ணை தொடர்புகொள்ளும் போது, போலீசாரின் உடனடி உதவி கிடைக்கும். சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications