வேந்தர் மூவீஸ் மதன் மீது ரூ 100 கோடி மோசடிப் புகார்- வழக்கு!
சென்னை: தலைமறைவாகிவிட்ட வேந்தர் மூவீஸ் மதன் மீது ரூ 100 கோடி மோசடிப் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஆர்எம் நிறுவனத்தின் அதிபர் பச்சைமுத்துவுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக, கங்கையில் மூழ்வு சாகப் போவதாக கடிதம் எழுதிவிட்டு தலைமறைவாகிவிட்டார் வேந்தர் மூவீஸ் மதன்.
அவரைக் கண்டுபிடித்துத் தரப் போடப்பட்ட ஆட்கொண்ர்வு மனுவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் மதனை கண்டுபிடிக்கும் வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளது.
ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படை களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிப்படை வாரணாசியில் முகாமிட்டுள்ளனர். மேலும் 3 தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் மதனை தேடும் பணியில் இறங்கி உள்ளனர்.
மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்பு சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து விட்டதாக மதன் மீது 63 பேர் புகார் கொடுத்துள்ளனர். சுமார் ரூ.100 கோடி அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
மதன் இருக்கும் இடத்தை போலீசாரால் இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர் கண்டுபிடிக்கப்பட்டவுடன், மோசடி வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.