ரூ. 1.50 எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலித்த அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 17,000 அபராதம்
நாமக்கல்: கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அரசு போக்குவரத்து கழகத்துக்கு, 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தன் மனைவியுடன் குமாரபாளையத்தில் இருந்து சங்ககிரிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, பேருந்துக் கட்டணமாக ரூ. 10 பாலசுப்ரமணியத்திடம் வசூலிக்கப் பட்டது. ஆனால், குமாரபாளைத்தில் இருந்து சங்ககிரிக்கு, 8.50 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இது தொடர்பாக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் மூலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் பாலசுப்ரமணி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை குறைதீர் மன்ற தலைவர் அய்யப்பன், உறுப்பினர் மலர்க்கொடி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் முடிவில், "பயணியிடம் கூடுதலாக வசூல் செய்த 1.50 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 5,000, ரூபாயும், வழக்கு செலவுக்கு 2,000 ரூபாயும், நுகர்வோர் நல நிதிக்கு 10 ஆயிரம் ரூபாயும் அரசுப் போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications