குப்பையில் போட்ட ரூ.4 கோடி... போலீசார் தேடியும் சிக்காத பணம்.. கோவையில் பரபரப்பு
4 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் கோவையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் ரூ.4 கோடி மதிப்பிலான பணம் குப்பையில் வீசப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் போலீசார் பணத்தைத் தேடி அலைந்தனர். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி தளம் உள்ளது. இங்கு இரவு சிலர் 4 கோடி ரூபாயை மூட்டையாக கட்டி காரில் கொண்டு வந்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கொட்டப்பட்டிருப்பதாகவும் இது கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் என்றும் தகவல் பரவியது.

இதனால் பரபரப்படைந்த போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியும் பணம் கிடைக்கவில்லை. பணத்தை சிலர் கட்டு கட்டாக தூக்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் மூலம் ரூ.4 கோடி ரூபாய் குப்பையில் வீசப்பட்டதாக வதந்தி பரவியதாக கூறப்படுகிறது.
கணக்கில் காட்ட முடியாத, பல கோடி ரூபாயை பலர் பதுக்கி வைத்திருக்கிறார்கள். தங்கம், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள், ஹாவாலா மோசடி கும்பல் உள்ளிட்டோர் பல கோடி ரூபாயை பதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த பணம் ரோடு, குப்பை தொட்டிக்கு வர போகிறது என வாட்ஸ் ஆப்பில் வேகமாக வதந்திகள் பரவி வருகிறது. இதனால் போலீசார் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். குப்பை தொட்டியில் பணம் கிடப்பதாக யாரோ புரளி கிளப்பி வருவதாக போலீசார் குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications