மது குடிக்க ரூ.500 தர மறுத்த நண்பனை குத்திக் கொன்ற நபர்
குமரி: மார்த்தாண்டம் அருகே மது அருந்த ரூ.500 கொடுக்காத நண்பனை ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள முளன்குழி புலிச்சவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரவி. கட்டிட தொழிலாளி. அவர் இரவு கரவிளாகம் பகுதியில் உள்ள வண்ணான்குளத்தங்கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது கரவிளாகத்தை சேர்ந்த அவரது நண்பர் ரமேஷ் மது அருந்துவதற்காக பாட்டிலுடன் அங்கு வந்தார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை சரமாரியாக குத்தினார். இதில் ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். உடனே ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே ரவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் மக்கள் திரண்டனர். அவர்கள் இது குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தக்கலை ஏ.எஸ்.பி. விக்ராந்த் பாட்டீல், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் மது அருந்துவதற்காக ரவியிடம் ரூ.500 கேட்டதும், அதற்கு ரவி பணம் கொடுக்க மறுத்ததும் தெரிய வந்தது. இதில் ரவி மீது ரமேஷ் ஆத்திரத்தில் இருந்த நிலையில் இரவில் அவர்களுக்கிடையே நடந்த மோதல் முற்றி கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.