பழைய 500, 1000 நோட்டுக்களை மாற்ற குவிந்த மக்கள்.. திண்டாடிய வங்கிகள்!
கைவசம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் குவிந்ததால் வங்கி ஊழியர்கள் திண்டாடினர்.
சென்னை: வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து அவஸ்தைப்பட்டனர். சென்னையில் பாதுகாப்புக்காக 3000 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30ம் தேதிவரை அவகாசம் உள்ளது. இதற்காக, போதுமான அளவிற்கு புதிய கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வினியோகித்துள்ளது.

நாடுமுழுவதும் நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் அவைகளை வங்கிகள் தபால் நிலையங்களில் நவம்பர் 10 முதல் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. 100, 50 ரூபாய் சில்லறை பணம் வைத்திருந்தவர்கள் மட்டுமே தப்பினர். பலரும் பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, வங்கிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனையடுத்து செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு, பொருட்கள் வாங்க முடியாமல் தவித்த பொதுமக்கள், இன்று காலையிலேயே வங்கிகளுக்கு படையெடுத்தனர்.
சென்னை ரிசர்வ் வங்கியின் முன் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 8 மணிமுதலே மக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கிவிட்டனர். இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை காவல்துறை ஆணையர் அறிவுரை
வங்கிகள், தபால்நிலையங்கள் முன்பு போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து அப்புறப்படுத்த வேண்டும். ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
வங்கிகள், தபால்நிலையங்களில் யாராவது பணத்தை மாற்றி தருகிறோம் என்று கூறினால், அவர்களிடம் பணத்தை வழங்கக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த கூட்ட நெரிசல் இன்று ஒரு நாள் மட்டுமின்றி, அடுத்து வரும் நாட்களில் நீடிக்கும். இதை கருத்தில் கொண்டு, வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளை இயங்கச் செய்ய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் முடிவு செய்துள்ளன.
நாட்டில் 56 கிராமப்புற வங்கிகள் உள்பட 149 வர்த்தக வங்கிகள் உள்ளன. அவற்றுக்கு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிளைகள் உள்ளன. இவை அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்.
தபால் நிலையங்களில் பாதுகாப்பு
நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் தபால் நிலையங்களிலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தபால் நிலையங்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுமா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. தபால் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் இன்று காலை முதல் வங்கிகளில் பணத்தை மாற்றிக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இதற்காக வழிமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50, 100, 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன. இவைகளை மாற்ற வழிவகை சொல்லப்பட்டுள்ளது.
பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள்
இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அடையாள அட்டை அவசியம்
இதன் படி ஒரு நபர் வங்கி அல்லது தபால் நிலையத்துக்கு சென்று தன்னிடம் உள்ள ஆதார் , டிரைவிங் லைசென்ஸ் , வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டி பணத்தை மாற்றலாம். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பணத்தை மாற்றலாம்.












Click it and Unblock the Notifications