நெல்லையில் ஒரே நாளில் ரூ.79 லட்சம் ரொக்கம், அதிமுக கரை வேட்டிகள் பறிமுதல்
நெல்லை: நெல்லையில் நேற்று ஒரே நாளில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 79 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிமுக கரை வேட்டிகளை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலம் முழுவதும் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.79 லட்சம் சிக்கியது. இந்நிலையில் இரவு வடக்கு தாழையூத்தில் அருந்ததியர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக கரை வேட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தாழையூத்து சப் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அங்கு சோதனை நடத்தியதில் அதிமுக கரை வேட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய கன்னையா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
அதிமுக பிரமுகர் ஒருவர் இந்த வேட்டி பண்டலை போட்டு விட்டு சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து அனைத்து வேட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications