தமிழகத்தில் ரூ.92 கோடி பறிமுதல்: நாளை முதல் பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிப்பு- லக்கானி
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நடந்திய சோதனையில் இதுவரை ரூ.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 190 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளதாகவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே19 தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மார்ச் 4ம் தேதி முதல் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் உதவியுடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் இதுவரை 190 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. அரசியல்வாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தேர்தல் பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இதுவரை ரூ.92 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் நேற்று நடந்த சோதனையில் ரூ.3.58 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 6 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.
234 தொகுதிகளிலும் ஷிப்டுக்கு 25 படைகள் வீதம் மொத்தம் 75 குழுக்கள் பணியில் ஈடுபடுவார்கள் என லக்கானி கூறியுள்ளார். மேலும் சென்னையில் மட்டும் தொகுதிக்கு 25 என்ற வீதம் பறக்கும் படை பணியில் ஈடுபடுவார்கள் என லக்கானி தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஓட்டுக்கு நோட்டை கொடுத்து விடுவார்களா? அல்லது பால்காரர், பேப்பர்காரர் வடிவில் டோக்கன்களை போடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓட்டுக்கு பணமோ, பொருளோ, டோக்கனோ கொடுத்தால் உடனே கைது செய்யப்படுவார்கள் என்றும் ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளதால் இந்த தேர்தலில் ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது கட்டுப்படுத்தப்படும் என்றே கூறப்படும்.












Click it and Unblock the Notifications