தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி: தமிழிசை, இல.கணேசன் உட்பட 25000 பேர் கைது
சென்னை: சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேரணி நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் 25000 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) இயக்கத்தின் ஆண்டுவிழா மற்றும் ராஜேந்திர சோழனின் 1000-வது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தின் 7 முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த பேரணியால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும் என்று கருதி காவல்துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பேரணிக்கு அனுமதி பெற்றது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு, ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மாதிரி உடை அணிந்து செல்லும் இப்பேரணியை அனுமதிக்க முடியாது என்று காவல்துறை கூறியது. ஆனால் பேரணி நடத்துவதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் உறுதியாக இருந்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக குவிந்தனர். எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை கைது செய்து 7 திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர். இந்த பேரணியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் அனைவரும் நேற்று இரவே விடுவிக்கப்பட்டனர்.
மதுரை
இதேபோன்று மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் 800 பேர், கிருஷ்ணகிரியில் 704 பேர், தருமபுரியில் 84 பேர், சேலத்தில் 650 பேர், நாமக்கல்லில் 300 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விருதுநகரில்
விருதுநகரிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கு போலீசார் நிபந்தனைக்கு உட்பட்டு ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தனர். நேற்று மாலை விருதுநகர் தேசபந்து திடலில் இருந்து ஊர்வலமாக செல்ல ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் சீருடை அணிந்து வந்திருந்தனர்.
மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் சிவலிங்கம், தமிழக-கேரள பொறுப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் போலீசார் சீருடையுடன் ஊர்வலம் செல்ல அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஊர்வலம் செல்வதற்காக கூடியிருந்த 142 ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கைது செய்தனர். இதையொட்டி தேசபந்துதிடலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊட்டியில் 160 பேர் கைது
ஊட்டியில் போலீஸ் அனுமதிக்காத நிலையில் தடையை மீறி பேரணி நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 160 பேரை போலீசார் கைது
காஞ்சிபுரத்தில்
காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வணிகர் வீதியில் இருந்து ஊர்வலம் செல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோதண்டன் தலைமையில் மாவட்டத் துணைத்தலைவர் இராம. ஏழுமலை, கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ் உள்பட சுமார் 600 பேர் சீருடை அணிந்து, காவிக் கொடி ஏந்தியபடி திரண்டனர். சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என போலீஸார் மறுத்தனர். ஆனால் போலீஸாரின் அனுமதியை மீறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டனர். அப்போது மாணவர்கள், பெண்களை தவிர 300 தொண்டர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
தென்காசியில் கைது
தென்காசியில் பேரணி செல்வதற்காக பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திரண்டனர். மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். எஸ்பி நாரேந்திரன் நாயர் தலைமையில் தென்காசி நகர எல்லையான ஆசாத் நகர் முதல் புதிய பஸ் நிலையம் வரை சீரான இடைவெளியில் போலீசார் மற்றும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பஸ் நிலையம் அருகே சீருடையுடன் நின்றிருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி செல்ல முயன்றனர். அப்போது சீருடை அணிந்து பேரணி செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் கூறிய போலீசார் பேரணிக்கு வந்த 199 பேரை கைது செய்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பஸ் நிலையம் எதிரே உள்ள மணி மஹாலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மாலை முதல் இரவு வரை தென்காசியில் பதட்டமாக காணப்பட்டது
தமிழகம் முழுவதும்
நாமக்கல்லில் சீருடையில் பேரணியாக சென்ற 700க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல கோவை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நெல்லை, , நாகப்பட்டனம், சேலம், நீலகிரி, மார்த்தாண்டம், மற்றும் கடலூர் ஆகிய இடங்களில், சீருடையுடன் பேரணி சென்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications