ஆண்டாள் சர்ச்சையில் பெண் சீடர்களின் ஆபாச பேச்சு... பெற்றோரின் மனநிலை என்ன?
ஆண்டாளை இழிவுபடுத்தியதாக கூறி வைரமுத்துவை வசைபாடி வெளியிடப்படும் பெண் சீடர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் சீடர்களின் பெற்றோர் நிலை என்ன நினைத்தாலே கலக்கமாக இருக
Recommended Video
சென்னை : ஆண்டாளை இழிவாக பேசியதாக வைரமுத்துவை ஆபாச வசை பாடி இணையத்தில் வெளியிடுவதை ட்ரென்ட்டாக வைத்துள்ளனர் பெண் சீடர்கள் சிலர். இவர்களின் சொல்லவும் கேட்கவுமே கூசும் ஆபாச வசவுகளை சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் பெற்றோருக்கு மிகப்பெரிய அவமானத்தையே இந்த வீடியோக்கள் தேடித் தந்துள்ளன.
பெற்றோரின் விருப்பப்படியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ ஆசிரமங்களில் சீடர்கள் அடைபட்டு விடுகின்றனர். பக்தியின் காரணமாக அவர்களே வந்து தஞ்சமடைந்துவிட்டார்கள் என்று அவர்களின் "மாஸ்டர்கள்" இதற்கு காரணங்களைச் சொல்கின்றனர். ஆசிரமத்திற்குள் போன தங்களின் பிள்ளைகளை மீட்கப் போராடி தோற்ற கதைகளும் இருக்கிறது.
தங்களது பிள்ளைகள் இறை பணி தான் செய்கிறார்கள், அதனால் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று நினைத்திருந்த பெற்றோர் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது ஆண்டாள் விவகாரத்தில் வெளியாகியுள்ள பெண் சீடர்களின் பகீர் வீடியோக்கள். ஆண்டாளை எப்படி இழிவாக பேசலாம் என்று இவர்கள் ஆதங்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும், இவ்வளவு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான வார்த்தைகள் தான் அவர்களுக்கான இறை பணியாக ஆசிரமங்களில் கற்றுத் தரப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
பெண் சீடரின் நாராச பேச்சு
இப்போது தான் பூஜை முடித்து விட்டு வந்தேன், காலையிலேயே வைரமுத்துவிற்கு ஒரு வீடியோவை பதிவிடுகிறேன் என்று இளம் பெண் சீடர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அத்தனை நாராசம். பார்க்க நாகரிமாக வாழ்ந்து நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் போல காட்சியளிக்கும் அந்த இளம் பெண் பேசும் பேச்சுகளை வைத்து கெட்ட வார்த்தைகளுக்கென தனி அகராதியே போட்டுவிடலாம் போல அந்த அளவிற்கு ஆபாச பேச்சுகள்.
இது தான் இறை பணியா?
இந்தப் பெண்ணை சூழ்ந்து கொண்டு இருக்கும் பெண்களைப் பார்த்தால் அவர்கள் அத்தனை பேரும் இளம் பேதைகளே. இப்படி ஆபாச வசவுகளை அவிழ்த்து விடும் வாயால் தான் இறை துதி பாடல்கள் பாடப்படுகின்றனவா என்று சமூக வலைதளங்கள் கொந்தளிக்கின்றன. இந்து மதம், பெரியாரிஸம் என்ற கொள்கைகள் சார்பாக நின்று இந்த விஷயங்களை பார்க்காமல் சமூக அக்கறையுள்ளவர்களாக இந்தப் பிரச்னையை அணுக வேண்டும்.
எதிர்காலம் என்ன?
வாழ்நாள் முழுவதும் இந்த பெண்களின் வாழ்க்கை ஆசிரமத்திலேயே முடிந்துவிடுமா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து சமூகத்துடன் இணக்கமான வாழ்க்கை வாழ இந்தப் பெண்களின் இந்த வீடியோ பேச்சுகள் அனுமதிக்குமா. சமூக வலைதளங்களில் போர்ன் என்று சிறுவர்கள் பயன்படுத்தக் கூடாத விஷயங்கள் இருக்கின்றன.
கூனிக்குருகும் பெற்றோர்
ஆனால் பெண் சீடர்களின் இந்த ஆபாச பேச்சுகள் சரளமாக வலைதளங்களில் உலா வருகின்றன. இதைத் தான் இறைபணியாற்றும் அவர்கள் அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுத் தரப் போகிறார்களா? முன் பின் அறிமுகமில்லாத நமக்கே இந்தப் பெண்களின் பேச்சு கோபத்தையும் கொந்தளிப்பையும் தருகிறதோ, அவர்களைப் பெற்றோரின் நிலை என்னவாக இருக்கும். இது தன்னுடைய மகள் தான் என்று சொல்லிக் கொள்ள முடியாத அசிங்கத்தைத் தான் பெற்றோருக்குத் தந்துள்ளனர் பெண் சீடர்கள்.