தேர்தல் செலவு செய்யாத மாவட்ட செயலாளர்கள்: விசாரணை களத்தில் நால்வர் அணி
சென்னை: தேர்தலில் பணத்தை செலவிடாதாத வேட்பாளர்களையும், மாவட்ட செயலாளர்களையும், ஆளும் கட்சி வட்டம் கட்ட தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு தெரியாமல் எப்படி பணம் பட்டுவாடா ஆனது என்ற விசாரணையில் மத்திய உளவுத்துறை இறங்கியுள்ளது.

வயிற்றில் புளி
ஆச்சரியம்.. ஆனால் உண்மை. ஆளும் தரப்பிலும், எதிர்தரப்பிலும் இப்போது, ஒரே கவனம் பணப்பட்டுவாடா மீதுதான். ஆனால் நோக்கம் வேறு. என்ன புரியவில்லையா? ஏப்ரல் 24ம்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தாலும் முடிந்தது, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

பிரச்சார போக்கு மாறியது
முதலில் எதிர்க்கட்சிகளை பார்ப்போம். இதில் திமுகதான் மிகவும் தவித்துக்கொண்டுள்ளது. நடப்பது நாடாளுமன்ற தேர்தல், மத்திய அரசுக்கு எதிரான கோபத்தைதான் அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மின்வெட்டு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என மாநில அரசுக்கு எதிரான குற்றப்பட்டியலை வாசித்தார் ஸ்டாலின்.

வட போச்சே..
இதனால் ஆளும் தரப்பு சற்று ஆட்டம் கண்டது என்னவோ உண்மைதான். 40க்கு நாற்பது என்ற நம்பிக்கையில் இருந்த ஆளும் கட்சி வரவர ஒரு 30 இல்லை.. இல்லை.. 25 கிடைத்தாலும் சந்தோஷம்தான் என்ற மனநிலைக்கு வர இந்த பிரச்சார யுக்தியும் ஒரு காரணம். ஆனால் அதிமுக ஒட்டுக்கள் பிரிந்து பாஜக கூட்டணிக்கு செல்வதால் அவர்கள் நினைத்ததைவிட மேலும் சீட் எண்ணிக்கை குறையும் என்று தகவல் கிடைத்தது ஆளும்கட்சிக்கு.

காசு..பணம்.. துட்டு... மணி..
இதன்பிறகுதான் 'தேர்தல் செலவுகளை' சரிவர செய்யுமாறு ஸ்ட்ரிக்டாக கட்டளை பிறந்திருக்கிறது ரத்தத்தின் ரத்தங்களுக்கு. கடைசி நேரத்தில் வாக்காளர்கள் வீடுகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் விசிட் அடித்ததால் மக்கள் மனம் மாறிப்போயிருக்குமோ என்றுதான் திமுகவுக்கு பயம். எனவேதான், 'காசு.. பணம்... துட்டு.. மணி.. மணி' என முறையிட்டுக்கொண்டே, தேர்தல் ஆணையத்தை நோக்கி ஓடின திமுக, பாமக என எல்லா எதிர்க்கட்சிகளும்.

அமுக்கிட்டாங்களா
சரி, எதிர்க்கட்சிகளுக்குத்தான் பணநாயகத்தின் மீது பயம். ஆளும் கட்சியை மீறி எப்படி, யார் பணம் கொடுத்துவிட முடியும். அவர்கள் ஏன் நாடிக்கு கீழே கையை கொடுத்து பணத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்? என்ற கேட்க தோன்றலாம். எதிர்தரப்புக்கு பணம் வாக்காளர் கைக்கு சேர்ந்துவிட்டதோ என்ற பயம் என்றால், ஆளும் கட்சிக்கு தேர்தல் செலவு சரியாக செய்யப்படாமல் சொந்த கட்சியினராலேயே அமுக்கப்பட்டுள்ளதோ என்ற பயம். ஆக மொத்தம் எல்லாரு தூக்கத்தையும் பணம் தான் கெடுத்துக்கொண்டுள்ளது. அது எப்படி தெரியுமா?

புதுசு கண்ணா புதுசு
அதிமுக தரப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்கள். மாவட்டச் செயலாளர் மட்டத்திலும் பணியாற்றாதவர்கள். இதனால் மாவட்டச் செயலாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே வேதவாக்காக கருதுபவர்கள். மாவட்டச் செயலாளர்களில் சிலருக்கோ, நமக்கு தேர்தலில் வாய்ப்பளிக்காமல் அடுத்த கட்டத்திலுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்களே என்ற ஆதங்கம். இதனால் சில மாவட்ட புள்ளிகள், தங்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம். தேர்தல் நிதியையும் முழுமையாக செலவிடவில்லை.

எதுக்கு வம்பு
ஆனால் தங்களை வேட்பாளர்களாக அறிவித்த மகிழ்ச்சியில் இருந்தே வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதைப்பற்றிய அக்கறை இல்லை. சில வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி குறித்த தகவலும் காதுக்கு எட்டவில்லை. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு தங்கள் மாவட்ட செயலாளர்கள் பற்றி தெரிந்திருந்தும், அவர்களை மீறி மேலிடத்துக்கு எப்படி புகாரை கொண்டு செல்ல என தெரியவில்லை. அப்படி கொண்டு போனாலும், பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவருமோ என்ற பயம். இதனால் பேசாமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது. சில தொகுதிகளில், வேட்பாளர்களே மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் தேர்தல் செலவை பற்றி கவலைப்படாமலும் இருந்துள்ளனர்.

எங்கப்பா அந்த நாலு பேரும்?
இந்த உள்ளடி வேலைகள் குறித்தும், வேட்பாளர்களின் மெத்தனம் பற்றியும், தேர்தல் முடிந்ததும் கட்சியின் தலைமைக்கு தகவல்கள் பறந்துள்ளன. கடுதாசிகள் வந்து குவிகின்றனவாம். தேர்தல் செலவுகளை ஒழுங்காக பார்க்காத வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் யார் என்று விசாரிக்க நால்வர் அணியை களமிறக்கியுள்ளார் முதல்வர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய நால்வருக்கும் ஆளுக்கு 10 தொகுதிகளின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை முடிவில் கடும் நவடிக்கைகள் பாயும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

மாநில உளவுத்துறையும்...
இந்த திருவிளையாடல் குறித்த விசாரணையில் மாநில உளவுத்துறையும் இணைந்துள்ளது. தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் உளவுத்துறையினர் பண பட்டவாடா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக எந்தெந்த பகுதிகளுக்கு பணம் முறையாக போய் சேரவில்லை. அநத பகுதியில் பணம் பட்டுவாடா செய்த நிர்வாகிகள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வார்டு வாரியாக விசாரணை
நெல்லை, தூத்துக்குடி பகுதியில் வார்டு வாரியாக பண பங்கீட்டில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பாதகமாக இருந்தால் குறிப்பிட்ட தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

குதித்தது மத்திய உளவுத் துறையும்...
இதற்கிடையே, சென்னையில் இருந்து எல்லாத் தொகுதிக்கும் எப்படி பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதை மத்திய உளவுத் துறை கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். வர்த்தகப் பிரமுகர்களுக்கு இதில் பிரதான பாத்திரம் இருந்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. வர்த்தகர்கள்தான் பணத்தைப் பக்குவமாகக் கொண்டு செல்ல பழக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களைத் தேர்வு செய்தார்களாம். ஒரு துணிக் கடை அதிபர், இரு ஹோட்டல் முதலாளிகள், ஒரு ஸ்டீல் நிறுவனம் என்று பெயர் திரட்டி உள்ளதாம் மத்திய உளவுத்துறை.












Click it and Unblock the Notifications