போடி நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக களம் இறங்குகிறார் "கூடங்குளம்" உதயகுமார்!
போடி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஆண்டுகள் கணக்கில் நடத்தி வரும் சுப. உதயகுமார் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராகவும் போராட களம் இறங்குகிறார். இது தொடர்பாக போடி பகுதியில் பொதுமக்களையும் உதயகுமார் சந்தித்துப் பேசினார்.
தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்து பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலையில் இந்திய அணுசக்தி கழகம் சார்பில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மலை பகுதியில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு கம்பி வேலி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளன.
அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள அம்பரப்பர் மலைக்கு வந்தார்.
அங்கு பொது மக்களிடையே பேசிய அவர், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவதால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது பொய்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு வந்து ஆய்வு மையம் அமைக்கின்றனர். மலையை குடைந்து தோண்டப்படும் கழிவுகள் பட்டாலே விவசாய பணிகள் அடியோடு பாதிக்கும். நியூட்ரினோ ஆய்வகம் குறித்து 2011-ம் ஆண்டு புத்தகம் எழுதி உள்ளேன். நியூட்ரினோ என்பது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடியது.
இந்த ஆய்வு மையம் குறித்து இந்திய அணுசக்தி துறை மக்களிடம் நேரடியாக எந்த விதமான விளக்கங்களும் அளிக்கவில்லை. இதை தடுக்க அனைத்து மக்களும் தயாராக வேண்டும் என்றார்.
அடுத்த போராட்ட களம் ரெடி!












Click it and Unblock the Notifications