சம்பளமும் கிடைக்காமல் ஊருக்கும் போக முடியாமல் சவுதியில் தவிக்கும் 110 இந்தியர்கள்
சென்னை: சவுதியில் உள்ள நிறுவனம் ஒன்று சம்பளம் வழங்காமல் திடீர் என ஓராண்டுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கியதை அடுத்து தமிழர்கள் உள்பட 110 இந்தியர்கள் அங்குள்ள தொழிலாளர் முகாமில் தங்கியுள்ளனர்.
சவுதி அரேபியாவின் ஜுபைல் நகரில் இருக்கும் கட்டுமான நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் அவர்களை திடீர் என்று கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது.
சம்பள பாக்கியும் கிடைக்காமல், ஊர் திரும்ப எக்சிட் விசாவும் கிடைக்காமல் தமிழர்கள் உள்பட 110 இந்தியர்கள் ஜுபைல்-தம்மாம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொழிலாளர் முகாமில் தவித்து வருகிறார்கள். அந்த நிறுவனம் இந்திய தூதரக அதிகாரிகளுக்கோ, சவுதி அதிகாரிகளுக்கோ ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளது.
இது குறித்து சவுதியில் தவித்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த எஸ். முருகன் கூறுகையில்,
எனக்கு கடைசியாக கிடைத்த சம்பளத்தை உடல்நலம் சரியில்லாத என் அம்மாவுக்கு அனுப்பி வைத்தேன். எங்களின் சம்பள பாக்கியை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தால் போதும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்றார்.
கடந்த மார்ச் மாதம் இந்திய தூதரகம் மற்றும் சவுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சம்பள பாக்கியை அளிப்பதாக வாக்குறுதி அளித்தும் அதை அந்நிறுவனம் நிறைவேற்றவில்லை.
இகாமாவும் காலாவதியாகிவிட்டதால் எக்சிட் விசா கிடைக்காது என்று தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களில் 71 இந்தியர்கள் எக்சிட் விசா பெற்று நாடு திரும்பியுள்ளனர். இருப்பினும் 110 பேர் எக்சிட் விசாவுக்காக காத்திருக்கிறார்கள் என சமூக ஆர்வலர் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.