மதுரை பிஆர்பி நிறுவனத்தில் இன்று சகாயம் ஆய்வு - ஆதரவாளர்கள் குவிந்ததால் பதட்டம்
மதுரை: மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் சகாயம் ஐ.ஏ.எஸ். இன்று மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
மதுரையில் கிரானைட் முறைகேடுகளை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. வரும் 15ம் தேதியோடு இக்குழுவின் விசாரணைக்காலம் முடிவடைகிறது. அன்றைய தினம் தனது விசாரணை அறிக்கையை சகாயம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் சகாயம் குழுவினர் நேரில் சென்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சகாயம் நேரடியாக சென்று பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று மதுரை மாங்குளம் பகுதியில் மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் சகாயம் தனது குழுவினரும் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்.
சகாயம் சோதனைக்கு வருவது குறித்து தகவல் அறிந்த பி.ஆர்.பி நிறுவன ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் அந்நிறுவனத்தைச் சுற்றி குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சகாயம் குழுவினரின் இந்த அதிரடி ஆய்வுகளால் கிரானைட் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.