"நரபலி உண்மையா... பொய்யா”- மேலும் 10 அடி தோண்டிப் பார்க்க சகாயம் உத்தரவு!
மதுரை: மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற இடத்தில் மேலும் 10 அடி தோண்டிப் பார்த்து அறிக்கை அளிக்க கலெக்டருக்கு விசாரணை அதிகாரி சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மேலூர் அருகே சின்னமலம்பட்டி மணிமுத்தாறு ஓடைப்பகுதியில் சுடுகாட்டில் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது மதுரை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோருக்கு கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அதிகாரி சகாயம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், "சின்னமலம்பட்டி சுடுகாட்டு பகுதியில் 5 அடி ஆழத்துக்கு மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 10 அடி ஆழத்துக்கு தோண்டினால் தான் வேறு ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய முடியும். எனவே, மேலும் 10 ஆடி ஆழத்துக்கு தோண்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு 10 அடி ஆழம் தோண்டப்பட்ட பின்பு, அதுகுறித்த விவரத்தை அறிக்கையாக தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
சகாயம் அனுப்பிய கடிதத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோர் பெற்றுக்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் மேலும் 10 அடி ஆழம் தோண்ட உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.