வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சகஸ்ரசண்டி மகாயாகம்.. 8 நாட்கள் நடக்கிறது!
வேலூர்: உலக நலன் கருதி சஹஸ்ர சண்டி யாகம் (1000 சண்டி யாகம்) வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் ஞாயிற்றுகிழமை வரை தொடர்ந்து 8 நாட்கள் இந்த யாகம் நடக்கிறது.
காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் இந்த யாகம் நடக்கிறது. பொது மக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் என ஸ்ரீதன்வந்திரி பீடம் கேட்டுக் கொண்டுள்ளது.
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீவித்யா உபாசகர் ப்ரம்மஸ்ரீ எம் ராமகிருஷ்ண சர்மா தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஞாயிறு காலை ஏழு மணிக்கு கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்று விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம், பைரவர் பலி பூஜைகள், பஞ்ச சூக்த பாராயணம், சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் திருவலம் சர்வமங்களா பீடம் ஸ்ரீலஸ்ரீ சாந்தா ஸ்வாமிகள், சென்னை டாக்டர் கோகிலா செல்வராஜ், சிவசந்திரன் தம்பதினர், தேன்மொழி ஜெயபால், ராமசந்திரன் குடும்பத்தினர், திருமதி அலமேலு பாச்கரன், வேலூர் மாவட்ட பிஆர்ஓ இளங்கோ, சித்தூர் ஆர்டிஓ ரவீந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஹோமத்தில் நூறு வகையான பழங்கள், புஷ்பங்கள், மூலிகைகள், கரும்பு, மோதகம், அப்பம், அருகம்புல், நெல்பொரி மற்றும் அஷ்டதிரவியங்கள் அன்ன பிரசாதங்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இன்று கோ பூஜை, புண்ணியாக வாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம் நடந்தது.
இன்று மாலை லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெறுகிறது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.