ஓ மை காட்... ஊர் நடுவே திரை கட்டி 'என்னை அறிந்தால்' ஒளிபரப்பு- 2 பேர் கைது!
சேலம்: திருட்டு விசிடி பார்ப்போர் அடுத்தடுத்து படு வேகமாக டெவலப் ஆகி வருகின்றனர். அடக்கம் ஒடுக்கமாக படம் பார்த்த காலம் போய் இப்போது கோவில் திருவிழாவில் ஊருக்கு நட்ட நடுவே திரை கட்டி படத்தைப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.
சேலத்தில் கோவில் திருவிழா ஒன்றின்போது ஊர் நடுவே பெரிய திரை கட்டி என்னை அறிந்தால் படத்தை திரையிட்ட இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத், த்ரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்'.
இந்நிலையில், சேலம் மாவட்ட திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு அலுவலகத்தில், அய்ங்கரன் இன்டர்நேஷனல் மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் சேலம் மாவட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘‘சமீபத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்‘ திரைப்படத்தை உரிய அனுமதியின்றி சேலம் ஜாகிர்ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு திரையிடுவதாக‘‘ கூறியிருந்தார்.
புகாரின் மீது சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் இடம் சென்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ‘என்னை அறிந்தால்‘ திரைப்படத்தை வெண்திரையில் ஒளிபரப்பு செய்த சேலம் நேதாஜி நகரை சேர்ந்த குமார் (35) மற்றும் சின்னசாமி ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.டி, பிளேயர், புரஜக்டர், மினி திரை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
திருட்டு விசிடியில் படம் பார்ப்பதே சட்டப்படி குற்றம். ஆனால், இங்கு ஒரு ஊரே ஒன்று கூடி திருட்டு விசிடியில் படம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications