ரூ18.5 லட்சம் புதிய 2000 நோட்டுகளுடன் பிடிபட்ட பாஜக பொறுப்பாளர் நீக்கம்: தமிழிசை
சேலத்தில் ரூ18.5 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பாஜக பொறுப்பாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சேலம் மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளர் அருண்குமார் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில்., சேலம் மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் அருண்குமார் இரு தினங்களுக்கு முன் 18.5 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றிருக்கிறார். அவர் பல நிறுவனங்கள் நடத்தி வருகின்றார். சுமார் ஓராண்டுக்கு முன்னர் அவர் பாமக-வில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர்.
பிடிபட்ட பணத்திற்கு கணக்கு சமர்ப்பித்தாலும், யாரென்றும் பார்க்காமல் மறுநாளே வருமான வரித்துறையினர் அவரது நிறுவனங்களில் சோதனை நடத்தினர். எது எப்படி இருந்தாலும் கறுப்புப் பண ஒழிப்புதான் பாஜக-வின் உறுதியான கொள்கை. இந்த கொள்கைக்கும், கட்சியின் நல்ல பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியிருப்பதால் கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காது. அதனால், அருண் குமார் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.