சேலம் - சென்னைக்கு ரூ1499 கட்டணத்தில் விமான சேவை : தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலம் - சென்னைக்கு 1499 ரூபாய்க்கு விமான சேவையை இன்று முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் .
சேலம் : சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்று முதல் விமான சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சேவையை தொடங்கி வைத்தனர்.
1993ம் ஆண்டு சேலத்தில் தொடங்கப்பட்ட விமான நிலையம் போதிய வரவேற்பில்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான நகரங்களை இணைக்கும் உடான் திட்டத்தின் மூலம் சேலத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு 50 நிமிடத்தில் பயணிக்க முடியும். இதற்கு 1499 ரூபாய் பயணக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமான சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். இதற்காக சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்தில் எடப்பாடி பழனிசாமி, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் சேலம் விமான நிலையத்தில் காலை 10 மணிக்கு வந்து இறங்கினர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் விமான நிலையம் தொடங்கப்படுவதன் மூலம், சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர்கள் பயன் பெறுவர்.
விரைவில் சேலம் விமான நிலையம் விரிவாக்கப்பட்டு பெரிய விமானங்களும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச விமான டிக்கெட்டுகளையும் முதல்வர் வழங்கினார்.
இதனையடுத்து காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு முதல் விமானம் புறப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ட்ரூஜெட் என்கிற நிறுவனம் இந்த விமானங்களை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளது.
விரைவில் சேலத்தில் இருந்து திருப்பதிக்கும் விமான சேவை அளிக்கப்படும். இதன் மூலம் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் சென்னைக்கு 50 நிமிடங்களில் பயணிக்க முடியும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.